சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ. 5 உயர்த்துகிறது மத்திய அரசு?
டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூ5க்கு உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நரேந்திர மோடி பிரதமரான பின்னர் டீசல் விலை 50 காசுகள் உயர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து ரயில் பயணிகள் கட்டணம் 14.2%, சரக்கு கட்டணம் 6.5% என உயர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன் மின்சார ரயில்களில் மாதாந்திர சீசன் டிக்கெட் கட்டணம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் முதல் அமலுக்கு வருகிறது.

இத்தகைய கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்ட்னம் தெரிவிப்பதோடு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் மாதந்தோறும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்துவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் சந்தித்துப் பேசினார். அப்போது சிலிண்டர் விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அனேகமாக சிலிண்டர் எரிவாயு விலையை மாதந்தோறும் ரூ5 உயர்த்தலாம் என்று தெரிகிறது. அதேபோல் மண்ணெண்ணெய் விலையை மாதந்தோறும் ரூ1 உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications