'ஓல்ட் மங்' ரம்மை உருவாக்கிய தொழிலதிபர் கபில் மோகன் காலமானார்..ட்விட்டரில் பிரபலங்கள் அஞ்சலி!
ஓல்ட் மங் ரம்மை உருவாக்கிய தொழிலதிபர் கபில் மோகன் காலமானார்,
Recommended Video

காசியாபாத்: மதுபிரியர்களின் தேர்வுகளில் முதன்மையான ஓல்ட் மங் ரம் மதுபானத்தை உருவாக்கிய தொழிலதிபரான ஓய்வுபெற்ற பிரிகேடியர் கபில்மோகன் (வயது 88) உடல்நலக் குறைவால் காலமானார்.
ரம் வகை மதுபானத்தில் ஓல்ட் மங் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. இந்த ஓல்ட் மங் ரம் மதுபானம், மோகன் மியாகின் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.
இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான பிரிகேடியர் (ஓய்வு) கபில் மோகன் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார், உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் மோகன் நகரில் மாரடைப்பால் கபில் மோகன் சனிக்கிழமையன்று காலமானார்,

பூசா ரோடு பங்களா
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராகவும் கபில் மோகன் இருந்தார். நாட்டையே பெரும் பரபரப்பாக்கிய பல அரசியல் நிகழ்வுகளுக்கு டெல்லியில் இருக்கும் கபில் மோகனின் பூசா ரோடு பங்களாதான் மந்திராலோசனை மையமாக இருந்தது,

சஞ்சய் காந்தி திட்டம்
குறிப்பாக எமர்ஜென்சிக்கு பின் அமைந்த மொரார்ஜி தேசாய் ஆட்சியை காங்கிரஸ் கட்சியின் முகமாக இருந்த சஞ்சய் காந்தி கவிழ்த்ததில் கபில் மோகனின் பூசா ரோடு பங்களா முக்கிய பங்கு வகித்தது. இந்திரா காந்தி, ராஜீவ் காலங்களிலும் கபில் மோகனின் டெல்லி பூசா ரோடு பங்களா ஊடகங்களில் அடிபட்டு கொண்டே இருந்தது,

வாஜ்பாயுடனும்
இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ். ஜனசங்கம், பாஜக தலைவர்களுடனும் கபில் மோகன் நெருக்கமானவராக இருந்தார். அவரது டெல்லி பூசா ரோடு பங்களாவிலும் உ.பி., மோகன் நகரிலும் வாஜ்பாய் உள்ளிட்டோர் முகாமிட்டு ஆலோசனையும் நடத்தியிருக்கின்றனர்,

நூற்றாண்டுகளை கடந்தது
1855-ம் ஆண்டு எட்வர்டு டையர் என்பவரது நிறுவனத்தில் இருந்து கபில் மோகன் தலைவராக இருந்த மோகன் மியாகின் பூர்வீகம் தொடங்குகிறது. அதே காலகட்டத்தில் மியாகின் என்பவரும் மதுபான நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் இரண்டு நிறுவனங்களும் இணைய டையர் மியாகின் நிறுவனமானது,

மோகன் வசமான நிறுவனம்
நாடு விடுதலைக்குப் பின்னர் 1996-ம் ஆண்டு கபில் மோகன் வசம் இந்த நிறுவனம் வந்தது. அப்போது இதன் பெயர் மோகன் மியாகின் மதுபான ஆலை. 1980களில் இதன் பெயர் மோகன் மியாகின் லிமிடெட் நிறுவனமானது.

விஸ்வரூப வளர்ச்சி
1954-ம் ஆண்டு டிசம்பர் 19-ந் தேதிதான் ஓல்ட் மங் ரம் ரகத்தை கபில் மோகன் அறிமுகப்படுத்தினார். இதன்பின்னர் அவரது நிறுவனம் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்தது.

மறைந்தார் மோகன்
2010-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கபில் மோகனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. கபில்மோகனின் மறைவுக்கு ட்விட்டரில் ஏராளமானோர் இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்து வருகின்றனர், திரைமறைவு அரசியலில் சூத்திரதாரியாக கோலோச்சிய கபில் மோகனின் மறைவு ஊடகங்களில் பத்தோடு பதினொன்றாகவே இருந்துவிட்டது,












Click it and Unblock the Notifications