பா.ஜ.க.வி.ல் அதிரடி மாற்றம்! ஓம் மாத்தூரை துணைத் தலைவராக்கினார் அமித்ஷா!
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியில் அதிரடி மாற்றங்களை அக்கட்சித் தலைவர் அமித்ஷா கொண்டுவந்துள்ளார். பாரதிய ஜனதாவின் புதிய துணைத் தலைவராக ஓம் மாத்தூரை அக்கட்சித் தலைவர் அமித்ஷா நியமித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பில் அமித்ஷா முக்கிய மாற்றங்களை செய்துள்ளார். புதிதாக 3 துணைத் தலைவர்கள், 3 பொதுச்செயலாளர்கள், 4 செயலாளர்களை அவர் நியமித்துள்ளார்.
பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர்களாக இருந்த பண்டாரு தத்தேத்ராய, முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் மத்திய அமைச்சர்களாகிவிட்டனர். ரகுவர் தாஸ், ஹார்க்கண்ட் முதல்வராகிவிட்டார். கிரண் மகேஸ்வரி, வசுந்தரராஜே சிந்தியா அமைச்சரவையில் அமைச்சராகிவிட்டார். ராமசங்கர் கதேரியா, இணை அமைச்சராகி விட்டார். இதனைத் தொடர்ந்து இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாரதிய ஜனதா கட்சி விதிகளின்படி 13 துணைத் தலைவர்கள், 9 பொதுச்செயலர்கள், 15 செயலாளர்களை நியமிக்கலாம்.
தற்போது, பா.ஜ.க.வின் முன்னாள் பொதுச்செயலர் ஓம் மாத்தூர் துணைத் தலைவராகியுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு தலைமை வகித்தவர் ஓம் மாத்தூர்.
அக்கட்சியின் செயலராக இருந்த ஷ்யாம் ஜாஜூ, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. அவினாஷ் ராய் கன்னா ஆகியோரும் துணைத் தலைவராக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரங்களுக்காக பொறுப்பாளராக இருப்பவர் அவினாஷ் ராய் கன்னா. ஜம்மு காஷ்மீரில் பாரதிய ஜனதா ஆட்சி அதிகாரத்தில் அமருவதற்கு காரணமாக இருந்ததால் அவருக்கு கட்சியில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஹரியானா சட்டசபை தேர்தலில் வெல்வதற்கு வியூகம் வகுத்த விஜயவார்ஜியா, கட்சியின் பொதுச்செயலாளராக்கப்பட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் உறவினரான அருண்சிங், செயலாளர் நிலையில் இருந்து பொதுச்செயலாளராக்கப்பட்டுள்ளார். ஹரியானா மாநில கட்சி விவகாரங்களுக்கான செயலாளர் அனில் ஜெயன், கிழக்கு டெல்லி எம்.பி. மணீஷ் கிரி, ஜம்மு காஷ்மீர் மாநில பேச்சாளர் ஃபரூக் கான் ஆகியோரும் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஃபரூக் கானின் தாத்தா கர்னல் பீர்முகமது கான், ஜனசங்கத்தின் ஜம்மு காஷ்மீர் மாநிலத் தலைவராக இருந்தவர். ஜம்மு காஷ்மீர அமைச்சரவையில் இடம்கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டும் ஏமாற்றம் அடைந்திருந்த ஃப்ரூக் கானுக்கு தற்போது கட்சியில் பதவி உயர்வு கிடைத்திருகிறது.