கங்கையில் திடீரென மிதந்து வந்த 100க்கும் மேற்பட்ட உடல்கள்.. பெரும் பரபரப்பு.. விசாரணைக்கு உத்தரவு
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மற்றும் உன்னாவோ இடையிலான கங்கை ஆற்றில் திடீரென நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் மிதந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென எப்படி இத்தனை உடல்கள் வந்தன என்று விசாரிக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
பாரியார் என்ற இடத்தில் இந்த உடல்கள் கங்கை ஆற்றில் மிதந்து வந்தன.
இந்த உடல்கள் அனைத்தும் கங்கை ஆற்றில் விடப்பட்டவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் ஒரே சமயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள் மிதந்து வந்ததால் அப்பகுதியில் பரபரப்பும், வியப்பும் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் இத்தனை உடல்களையா ஆற்றில் போட்டனர் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து தற்போது கான்பூர் மற்றும் உன்னாவோ நகர நிர்வாகங்கள் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த உடல்களை மீட்டு இறுதிச் சடங்குகள் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சம்பவ இடத்திற்கு சென்று இறுதிச் சடங்குகளை மேற்பார்வையிட கலெக்டர் ஒருவரையும், டிஎஸ்பி ஒருவரையும் உ.பி. அரசு அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து உன்னாவோ நகர துணை கலெக்டர் சர்யு பிரசாத் கூறுகையில், தண்ணீர் குறைந்துள்ளதால், உடல்கள் மிதந்து வந்ததற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரிக்கப்படும் என்றார்.
புனித நதியாக கருதப்படும் கங்கை ஆறு பிண நதியாக மாறி பல காலமாகி விட்டது. இறந்தவர்களின் உடல்களை இங்கு விடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பலர் இதில் குதித்துத் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். வயதானவர்களை கங்கையில் கொண்டு வந்து பலர் விட்டு விட்டுச் செல்கின்றனர். பலர் இறந்தவர்களின் பிணங்களை கங்கை ஆற்றில் அப்படியே போட்டு விட்டுச் செல்கின்றனர். இதனாலும், பல்வேறு மாசுகளாலும் கங்கை நதி கெட்டுப் போய் விட்டது. தூய்மையற்று அசுத்த நதியாக மாறி விட்டது.
கங்கையை சுத்தப்படுத்த வேண்டும் என்று பல காலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோடி அரசு கங்கை நதியை சுத்தப்புத்த ரூ. 2037 கோடி மதிப்பீட்டில் திட்டம் வகுத்து அறிவித்தது. இந்த நிலையில் திடீரென கங்கை ஆற்றில் நூற்றுக்கணக்கில் பிணங்கள் மிதந்து வந்ததால் பரபரப்பாகியுள்ளது.












Click it and Unblock the Notifications