தென் மாநிலத்திற்கும் பரவிய 'பத்மாவதி' பட எதிர்ப்பு போராட்டம்.. பெங்களூரில் குவிந்த ராஜபுத்திரர்கள்
பெங்களூர்: பத்மாவதி என்ற பாலிவுட் படத்தில் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி பெங்களூரில் ராஜபுத்திர ஜாதியினர் இன்று தர்ணா நடத்தினர்.
வட மாநிலங்களில் படத்திற்கு எதிராக பாஜக மற்றும் சேவசேனை போன்ற கட்சிகள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், தென் மாநிலத்திற்கும் போராட்டம் பரவியதன் அறிகுறியாக இது பார்க்கப்படுகிறது.
பெங்களூர் நகரின் மத்திய பகுதியில் உள்ள டவுன்ஹால் பகுதியில் பல நூறு பேர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
ஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா அமைப்பின் தேசிய தலைவர் சுக்தேவ் சிங் தலைமையில் இப்போராட்டம் இன்று நடைபெற்றது. அப்போது நிருபர்களிடம் அவர் கூறுகையில், டிசம்பர் 1ம் தேதி பத்மாவதி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த படம் தடை செய்யப்பட வேண்டும், அல்லது சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட வேண்டும். முதலில் எங்களுக்கு அந்த படம் திரையிட்டு காட்டப்பட வேண்டும். நாங்கள் ஒப்புக்கொண்ட பிறகே படம் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என்றார்.
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் டிசம்பர் 1ம் தேதி பத்மாவதி என்ற வரலாற்று கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.