'பரோட்டா' அனுப்பி கெஜ்ரிவாலை மடக்கிய பலே டெல்லி ஆளுநர்!
டெல்லி: டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, டெல்லி துணை நிலை ஆளுநர், இரண்டு போலீஸாரை கட்டாய விடுப்பில் அனுப்பியதே என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால் கடும் பசியோடு தவித்த கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் நஜீப் ஜங் அனுப்பி வைத்து சுவையான பரோட்டாக்கள்தான், கெஜ்ரிவாலை இறங்கி வரச் செய்ததாம்.
டெல்லியில் தொடர் தர்ணாப் போராட்டத்தில் குதித்திருந்த கெஜ்ரிவால் கொட்டும் பனி, கடும் குளிர், மழையைப் பொருட்படுத்தாமல் 2 நாட்கள் சாலையோரமாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
டெல்லி அரசுக்குக் கட்டுப்படாமல் செயல்பட்ட போலீஸாரை சஸ்பெண்ட் செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அவர் கோரியிருந்தார். இந்த நிலையில் 2 போலீஸாரை துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்து உத்தரவிட்டார். இதையடுத்து கெஜ்ரிவால் தனது போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.
ஆனால் அதற்கு முன்பாக கடும் பசியில் இருந்த கெஜ்ரிவாலைத் தேடி ஜங் அனுப்பி வைத்த சூடான பரோட்டாக்கள் தேடி வந்ததாம். அதுதான் அவரை அமைதிப்படுத்தி, பேச்சுவார்த்தைக்கு வர வைத்ததாம்.
போராட்டம் சூடுபிடித்திருந்த நிலையில், அன்று மதியம், கெஜ்ரிவால் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் யோகோந்திர யாதவ், ஆளுநரை நேரில் பார்த்துப் பேசினார். அப்போது போலீஸாரை சஸ்பெண்ட் செய்வது குறித்து பேசப்பட்டது. இந்த நிலையில்தான் கெஜ்ரிவால் பசியோடு இருப்பார், அவருக்கு இந்த பரோட்டாக்களை கொண்டு போய் கொடுங்கள் என்று கொடுத்தாராம் ஆளுநர் ஜங்.
யாதவும் அதை வாங்கிக் கொண்டு கெஜ்ரிவாலிடம் போய் கொடுத்து ஆளுநருடன் நடந்த பேச்சின் விவரத்தைத் தெரிவித்துள்ளார். நல்ல பசியோடு இருந்த கெஜ்ரிவால் பரோட்டாவை சாப்பிட்டு முடித்தபோது சற்று அமைதியடைந்தாராம். அதன் பின்னரே போராட்டத்தை விலக்கிக் கொள்ளும் முடிவுக்கு அவர் வந்ததாக தெரிகிறது.
பரோட்டாவைக் கொடுத்த ஜங், பசியோடு இருக்க வேண்டாம். நாங்கள் சமாதானக் கொடியை நீட்டுகிறோம், அதைப் பற்றிக் கொள்ளுங்கள், போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் என்ற செய்தியையும் கெஜ்ரிவாலுக்கு கொடுத்த கடிதத்தில் தெரிவித்திருந்தாராம் ஆளுநர் ஜங். இந்தக் கடிதம்தான் கெஜ்ரிவாலை இறங்கி வர வைத்து விட்டதாம்.
எப்படியோ 'பரோட்டா சூரி'யாக மாறி கெஜ்ரிவாலை 'கூல்' செய்து விட்டார் ஜங்...!