காட்டிக் கொடுத்த செல்ல கிளி, மாட்டிக் கொண்ட கொலையாளி...
ஆக்ரா: உத்தரப் பிரதேசத்தில் ஒரு கொலை வழக்கில் வித்தியாசமான முறையில் துப்பு துலக்கியுள்ளனர். அதாவது போலீஸாருக்கு ஒரு பச்சைக் கிளி துப்புக் கொடுத்து கொலையாளி பெயரையும் சொல்லி அவனைப் பிடிக்க உதவியுள்ளது.
அந்தக் கிளியின் உரிமையாளர் விஜய் சர்மாவின் நீலம் மற்றும் அவரது வளர்ப்பு நாய் ஆகியோர் இந்த மாதத் தொடக்கத்தில் கொலை செய்யப்பட்டனர்.
அவர்களைக் கொன்று யார் என்பது தெரியாமல் இருந்து வந்தது.
செல்லக்கிளி:
நீலம், தனது வீட்டில் ஒரு கிளியையும் வளர்த்து வந்தார். அந்தக் கிளியும், நாயும், நீலத்திடம் மிகவும் பிரியமாக இருக்குமாம். இந்த நிலையில் நீலம் மற்றும் நாய் இறந்து போனதால் கிளி பெரும் கவலை அடைந்து காணப்பட்டது.
பயந்த கிளி:
அந்த கிளி இதனால் சாப்பிடாமல் இருந்து வந்தது. ஆனால் அந்த வீட்டுக்கு விஜய்யின் நெருங்கிய உறவினரான அஷு என்பவர் வரும்போதெல்லாம் கிளி பயந்து போய் கூண்டுக்குள் ஓடிப் போய் விடுமாம். மேலும் மணிக்கணக்கில் வெளியே வராதாம்.
குழப்பமான விஜய்:
2 நாட்களுக்கு முன்பு விஜய் வீட்டுக்கு வந்தார். கிளியிடம் பேசியுள்ளார். ஆனால் கிளி பதிலளிக்கவில்லை. மகா அமைதியாக இருந்தது. இதைப் பார்த்து விஜய் சந்தேகமடைந்தார். கிளியின் நடவடிக்கை அவருக்குக் குழப்பத்தைக் கொடுத்தது.
அடையாளம் காட்டிய கிளி:
இதையடுத்து அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. அதாவது கிளிக்கு கொலையாளி குறித்து தெரிந்திருக்கும் என்ற சந்தேகம்தான் அது. இதையடுத்து கிளியிடம் தான் சந்தேகப்படும் நபர்களின் பெயர்களை வரிசையாகச் சொன்னார். அப்படிச் சொல்லும்போது உறவினர் அஷுவின் பெயரையும் சொன்னார். அப்போது அந்தக் கிளி வேகமாக 'Usne mara, Usne mara' அதாவது அவன்தான் கொன்றான் என்று கத்தியுள்ளது.
மாட்டிக் கொண்ட அஷு:
இதையடுத்து அதிர்ச்சி அடைந்தார் விஜய். உடனே போலிஸுக்குத் தகவல் கொடுத்தார். போலீஸுக்கும் கூட அஷு மீது சந்தேகம் இருந்ததாம். ஆனால் கிளி பொய் சொல்லாது என்ற நம்பிக்கையுடன் அஷு மீது போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அவன் உண்மையை ஒத்துக் கொண்டான். இதையடுத்து அவனை போலீஸார் கைது செய்தனர்.
நாயையும் கொன்ற கொலையாளி:
சம்பவ நாளின்போது அஷு தனது கூட்டாளிகளுடன் வீட்டுக்கு வந்துள்ளான். பின்னர் நீலத்தைக் கொல்ல முயற்சித்தனர். அப்போது நாய் தடுத்து அஷுவைக் கடித்துள்ளது. அதில் அஷுவின் விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நீலத்துடன், நாயையும் சேர்த்துக் கொன்று விட்டான் அஷு.