ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பாணியில் 'உத்தராந்தரா' தனி மாநிலம் உதயமாகும்: பவன் கல்யாண்
வட ஆந்திரா மாவட்டங்களை ஒருங்கிணைத்து உத்தராந்தரா தனி மாநில கோரிக்கை எழுந்துள்ளது.
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிந்ததைப் போல வட ஆந்திரா மாவட்டங்களை உள்ளடக்கிய உத்தராந்தரா தனி மாநிலம் உதயமாக நேரிடும் என ஜனசேனா கட்சித் தலைவரான நடிகர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆந்திராவின் வடபகுதி மாவட்டங்கள் விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம். இவை மூன்றும் ஒடிஷா எல்லையில் இருப்பவை. மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கலிங்க பேரரசின் நிர்வாகத்தில் இருந்தவை.
தற்போது இந்த மாவட்டங்களை ஒருங்கிணைத்து கலிங்க ஆந்திரா அல்லது உத்தராந்தரா என்ற தனி மாநில கோரிக்கையை நடிகர் பவன் கல்யாண் முன்வைத்து வருகிறார். இது தொடர்பாக பவன் கல்யாண் கூறுகையில், வடக்கு ஆந்திரா இயற்கை வளம் கொண்டது. இப்பகுதியின் கனிம வளம் கொள்ளை போகிறது.
வடக்கு ஆந்திரா புறக்கணிக்கப்படுவது தொடர்ந்தால் தெலுங்கானா பாணியில் உத்தராந்தரா தனி மாநிலம் உதயமாகும் என எச்சரித்துள்ளார். பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் கிரிக்கெட் வீரர் வேணுகோபால் அண்மையில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.