பெட்ரோலிய அமைச்சக ஆவணங்கள் திருட்டு: பத்திரிகையாளர் உட்பட மேலும் இருவர் கைது!
டெல்லி: மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் ஆவணங்களைத் திருடிய வழக்கில் டெல்லி பத்திரிகையாளர் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து இந்த மோசடியில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
பெட்ரோலிய அமைச்சகத்தின் கொள்கை முடிவுகளை வெளிப்படுத்தும் ஆவணங்களை திருடி பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்ததாக அமைச்சக ஊழியர்கள் இருவர் உட்பட 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த மோசடி தொடர்பாக டெல்லி பத்திரிகையாளர் சந்தனு சைகியா, தனியார் எண்ணெய் எரிவாயு ஆலோசனை நிறுவன அதிகாரி பிரயாஸ் ஜெயின் ஆகியோரும் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பணியாளர் ஒருவரையும் டெல்லி போலீஸ் தடுத்து வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் பெட்ரோலிய அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்களைத் திருடி 25-க்கும் மேற்பட்ட பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு கொடுத்து பணம் சம்பாதித்துள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெட்ரோலிய அமைச்சக ஊழியர்களின் துணையோடு சி.சி.டி.வி. கேமராக்களைத் துண்டித்துவிட்டு ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து வெளியே கசியவிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
இப்படி திருடப்பட்ட ஆவணங்களை லாபியிஸ்டுகள், ஆலோசனை நிறுவனங்களுக்கு ரூ50 லட்சம் முதல் ரூ2 கோடி வரை விற்பனை செய்தும் இருக்கின்றனர். திருடப்படும் ஆவணங்களின் முக்கியத்துவத்தைப் பொறுத்து அதன் விலை நிர்ணயிக்கப்படுமாம்.
இதற்காக போலி அடையாள அட்டைகள், டூப்ளிகேட் சாவிகள் என சகல வித முறைகேடுகளிலும் இவர்கள் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்களில் சந்தனு சைகியா இணையதளம் ஒன்றை நடத்தி வருகிறாராம். இதற்கு முன்னர் பிரபல நாளிதழில் வர்த்தக செய்தியாளராக இருந்தவராம். இவர் மூலமாகவும் பெரும் நிறுவனங்களுக்கு அமைச்சகத்தின் முக்கிய ஆவணங்கள் கைமாறியிருக்கிறது என்பதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.