இதை ஏன்டா படம் எடுத்த.. பத்திரிகை போட்டோகிராபரை அடிக்க பாய்ந்த காங். தொண்டர்கள்!
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்த இடத்தில் ரோட்டில் குண்டும், குழியும் இருந்ததை புகைப்படமாக எடுக்க முயன்ற ஆங்கில பத்திரிகை புகைப்படக்காரர் காங்கிரஸ் கட்சியினரால் தடுக்கப்பட்டார்.
கேரள மாநிலம், அருவிக்கரா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியின் கார்த்திகேயன் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவர் கேரள சபாநாயகராக பதவி வகித்து வந்தவர். எனவே இத்தொகுதியில் நடைபெறும் இடைத் தேர்தலை ஆளும் காங்கிரஸ் கட்சி கவுரவ பிரச்சினையாக எடுத்துள்ளது.

முதல்வர் உம்மன் சாண்டியே நேரடியாக வந்து பிரச்சாரம் செய்துள்ளார். குஷ்புவும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் சபரிநாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்த உம்மன்சாண்டி, எனது 4 வருட கால ஆட்சிக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக இந்த தேர்தலை பார்ப்பேன் என்றார்.

நான்காண்டுகால வளர்ச்சிக்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்ணாக இத்தேர்தலை நான் எடுத்துக்கொள்வேன் என்றும் உம்மன்சாண்டி கூறிவருகிறார். இந்நிலையில், முதல்வர் பிரச்சாரம் செய்ய வந்த இடத்தில் ரோடு குண்டு குழியுமாக இருந்ததை பார்த்துள்ளார் டெக்கான் க்ரானிக்கல் தலைமை புகைப்படக்காரர், பீதாம்பரன் பய்யேரி. எனவே முதல்வர் ஜீப் அந்த வழியாக போகும்போது, குழியையும், ஜீப்பையும் ஒன்றாக படமெடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கலாம் என்று திட்டமிட்டு சாலையோரமாக ரெடியாக நின்றுள்ளார்.

இதைபார்த்த காங்கிரஸ் தொண்டர்கள், இதையெல்லாம் படமாக எடுக்க கூடாது என்று பீதாம்பரியை மிரட்டியுள்ளனர். அதையும் மீறி, அவர் அங்கேயே நின்றபோது, காமிராவை பிடுங்கி, அடிக்க முயன்றுள்ளனர். அதற்குள் பிற மீடியா நிருபர்கள் அங்கு ஓடிவரவே, காங்கிரஸ் தொண்டர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர்.
படங்கள்: பி.பீதாம்பரம்- டெக்கன் கிரானிக்கிள்












Click it and Unblock the Notifications