தமிழகத்தில் ரூ.1,450 கோடியில் நியூட்ரினோ ஆய்வு மையம்- பிரதமர் அறிவிப்பு
ஜம்மு: தமிழகத்தில் ரூ. 1450 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வு மையம் துவங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். ஜம்மு பல்கலைக்கழகத்தில் நடந்த 101வது இந்திய அறிவியல் மாநாட்டை துவக்கி வைத்து அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
அறிவியல் துறையில் நம் நாடு முன்னேற்றம் அடைய எங்கள் அரசு பல்வேறு பிரிவுகளில் முதலீடு செய்துள்ளது. ரூ.3 ஆயிரம் கோடியில் தேசிய புவியியல் தகவல் தொடர்பு மையத்தை துவங்க திட்டமிட்டுள்ளோம். சர்வதேச அறிவியல் சமூகத்தில் இந்தியாவின் பங்கீடு முக்கியமானதாக இருக்கும். உலகின் முக்கிய ஆய்வு திட்டங்களில் இந்தியா பங்கு கொள்ளும்.
தமிழகத்தில் ரூ.1450 கோடியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கப்படும். பிரபல சிஇஆர்என் மையத்தில் இந்தியா அசோசியேட் உறுப்பினராகவிருக்கிறது. நம் நாட்டு விஞ்ஞானிகள் கடந்த காலத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு அதை நடைமுறையில் செயல்படுத்தி வருங்காலம் குறித்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.