எங்க அப்பாவைப் பத்தி பேசிட்டீங்க.. சரி போகுது.. ரஃபேல் என்னாச்சு?.. மோடிக்கு ராகுல் பொளேர் கேள்வி
ஷிர்ஷா: எங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பற்றி பேசும் பிரதமர் மோடி ரஃபேல் பேரங்கள் குறித்தும் வாய் திறந்து பேச வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜீவ் காந்தி ஊழல்வாதிகளில் நம்பர் 1 என கடுமையாக விமர்சித்தார் பிரதமர் மோடி. நாட்டின் போர்க்கப்பலை குடும்பத்தினரின் விடுமுறை கொண்டாட்டத்துக்கு பயன்படுத்தினார் ராஜீவ் காந்தி என அடுத்தும் தாக்கினார் மோடி.
இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றனர். பாஜகவிலும் மோடியின் ராஜீவ் காந்தி குறித்த பேச்சுக்கு எதிராக சலசலப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் ஹரியானாவின் ஷிர்ஷாவில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, என்னுடைய தந்தையை பற்றியும் என்னைப் பற்றியும் அதிகமாக பேசட்டும் பிரதமர் மோடி. அதேபோல் ரஃபேல் பேரங்கள் குறித்தும் வாய் திறக்க வேண்டும்.
அனில் அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தம் கிடைத்தது எப்படி? விமான தயாரிப்பில் ஈடுபடாத அனில் அம்பானிக்கு போர் விமானங்கள் தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைத்தது எப்படி? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டும்.
தொடர்ந்து ராஜீவ் காந்தியை விமர்சிக்கும் மோடி.. கோபத்தில் ராகுல் காந்தி.. வழக்கு தொடுக்க முடிவு!
ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் ரூ15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்பது உள்ளிட்ட ஏராளமான பொய் வாக்குறுதிகளை அள்ளிவிட்டவர் பிரதமர் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் உங்கள் வங்கிக் கணக்கில் 3,60,000 செலுத்துவோம்.
மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்த படி 10 நாட்களில் விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தோம் என்பதை இளைஞர்கள் நினைவில் வைக்க வேண்டும் என்றார்.
ஹரியானாவில் 10 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது,