மாநில செய்தியாளர்களை குமுற வைத்த பிரதமரின் செய்தியாளர் சந்திப்பு!
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பல மாநில செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படாததால் குமுறிப் போயுள்ளனர்.
நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்ற 10 ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமான மூன்றாவது பத்திரிகையாளர் சந்திப்பு டெல்லியில் நேற்று நடைபெற்றது. மொத்தம் 70 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது ஆந்திரம், கர்நாடகம், மகராஷ்டிரம், காங்கிரஸ் ஆட்சியில் அல்லாத மாநிலங்கள் தொடர்பாக கேள்வி எழுப்ப செய்தியாளர்கள் முயன்றும் அதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதனால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்த ஏராளமான செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் சுமார் 250 பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். அதில் குறிப்பிட்ட சில தேசிய, மாநில விவகாரங்களை எழுப்ப மட்டும் வாய்ப்பளித்ததாக செய்தியாளர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், ஆந்திரத்தில் நிலவும் தெலுங்கானா பிரச்னை, மகராஷ்டிர மாநிலத்தின் ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடு விவகாரம், கர்நாடகத்தில் காவிரி பிரச்னை, பிற மாநிலங்களில் லோக் ஆயுக்த அமலாக்கம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில அரசுகள் மத்திய அரசு மீது சுமத்திவரும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகளை எழுப்ப செய்தியாளர்கள் ஆயத்தமாக இருந்தனர்.
ஆனால், கடைசி வரை அவர்கள் கேள்வி எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. இதனால், பத்திரிகையாளர் சந்திப்பின் முடிவில் சில செய்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து, அவர்களை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரியும் அத் துறை உயரதிகாரிகளும் சமாதானப்படுத்தினர்.