ஸ்ரீவித்யாவின் சொத்துக்களைப் பராமரிப்பதில் முறைகேடு? எம்எல்ஏ கணேஷ்குமாரிடம் விசாரணை!
திருவனந்தபுரம்: மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் சொத்துக்களைப் பராமரிப்பதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், அதுகுறித்து கேரள எம்எல்ஏ கணேஷ்குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளனர் கேரள க்யூ பிரிவு போலீசார்.
தமிழ் சினிமாவில் சிவாஜி, ரஜினி, கமல் என்று பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா. இவர் மலையாளம், தெலுங்கு படங்களிலும், பிரபல நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
இந்த நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு புற்றுநோய் காரணமாக நடிகை ஸ்ரீவித்யா திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
ஸ்ரீவித்யாவிற்கு தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஸ்ரீவித்யா மலையாள நடிகரும் எம்எல்ஏவுமான ஒப்படைத்தார். இதற்காக உயிலும் எழுதி வைத்தார். அதில் ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை அறக்கட்டளை மூலம் நிர்வகிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
கணேஷ்குமார்
கணேஷ் குமார் தற்போதும் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் ஸ்ரீவித்யாவின் சொத்துக்களை முறையாகப் பராமரிக்கவில்லை என்றும், அதில், முறைகேடு நடப்பதாகவும், ஸ்ரீவித்யாவின் சகோதரர் சங்கர்ராமன் புகார் கூறினார்.
இது தொடர்பாக கேரள முதல்வர் உம்மன்சாண்டி, உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா ஆகியோரை நேரில் சந்தித்து முறையிட்டார். இதற்கு மறுப்பு தெரிவித்த கணேஷ்குமார், சொத்துக்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதாக கூறினார்.
என்றாலும் கேரள உள்துறை மந்திரி ரமேஷ் சென்னிதலா இந்த விவகாரம் தொடர்பாக மாநில குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, திருவனந்தபுரம் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் ராஜ்பால் மீனா தலைமையிலான போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.