அரசு பங்களாவை காலி செய்ய மறுத்த மாஜி அமைச்சருக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிப்பு!
டெல்லி: அரசு வீட்டை காலி செய்யாத முன்னாள் விமான போக்குவரத்து துறை அமைச்சர் அஜித் சிங் வீட்டின் மின்சாரம், தண்ணீர் இணைப்பை துண்டித்து அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சர்களாக இருந்த பலரும் டெல்லியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை காலி செய்யாமல் அடம் பிடித்து வருகின்றனர். இவர்களுக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அசருவதாக இல்லை.
இதில் ஒருவர்தான் முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் தலைவருமான அஜித் சிங். இவர் டெல்லி துக்ளக் ரோட்டில் உள்ள அரசு குடியிருப்பு பங்களாவில் குடியிருந்து வருகிறார். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த அரசு வீடு மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பனானந்தா சோனாவாலுக்கு ஒதுக்கபட்டது.
ஆனால் அஜித் சிங் இதுவரை அரசு வீட்டை காலி செய்யவில்லை.இதனால் தற்போதைய மத்திய அமைச்சர் தனியார் விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளார். பங்களாவை காலி செய்யுமாறு அஜித் சிங்க்கு பல முறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியும் அவர் காலி செய்வதாக தெரியவில்லை. இதையடுத்து போலீஸ் உதவியுடன் கடந்த மாதம் வீட்டை காலி செய்ய அதிகாரிகள் முயன்றனர்.
ஆனால், தகவல் அறிந்து அஜித்சிங்கின் ஆதரவாளர்கள் வந்து முற்றுகையிட்டு வீட்டை காலி செய்ய விடாமல் தடுத்தனர். இந்நிலையில் பங்களாவின் மின்சார, குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். இனியாவது அவர் காலி செய்வாரா அல்லது இன்வென்டர் மற்றும் லாரி தண்ணீரில் வாழ்க்கையை நகர்த்துவாரா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.