ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ். தீவிரவாதிகளா? ராணுவம் தீவிர கண்காணிப்பு!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக ராணுவ அதிகாரி சுப்ரதா ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் உக்கிர தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லை கிராமங்களையும் இலக்கு வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் தனது தாக்குதல் நடவடிக்கையை வெகுவாக குறைத்துள்ளது.
இந்த நிலையில் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் ராணுவ உயர் அதிகாரி லெப். ஜெனரல் சுப்ரதா ஷா கூறியதாவது:
எல்லைப் பகுதியில் 180 முதல் 200 தீவிரவாதிகள் ஊடுருவ காத்திருக்கிறார்கள். இதற்காகவே பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. கடந்த சில நாட்களில் ஊடுருவ முயன்ற 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அண்மையில் பெருவெள்ளத்தால் காஷ்மீர் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் தாக்குதலால் அசாதரணமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரானுவத்துக்கு எதிராக சில அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இதில் ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது இஸ்லாமிய தேசம் என்ற தீவிரவாத இயக்கத்தின் கொடிகளை சிலர் ஏந்தி இருந்தனர். இது குறித்து நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு லெப். ஜெனரல் சுப்ரதா ஷா கூறினார்.