துணிந்து இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்... தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு
டெல்லி: இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் துணிச்சலுடன் முதலீடு செய்யுமாறு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
டெல்லியில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில், நேற்று நாட்டின் முக்கிய தொழில் அதிபர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், உலகளாவிய பொருளாதார மந்த நிலை குறித்தும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்தும் தொழில்துறையினர் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் மோடி விவாதித்தார்.
இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழுமத்தின் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி, ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல், ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர் உள்ளிட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் தவிர இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சார், இந்திய ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பொருளாதார வல்லுனர் சுபிர் கோகரான், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி அயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனக்ரியா போன்றோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இதில், சமீபத்திய உலகளாவிய சம்பவங்கள், இந்தியா மீது அவற்றின் தாக்கங்கள், இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தக்க துறைகளில் தொழில் துறையினர் துணிச்சலுடன் முதலீடுகளை செய்ய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். குறைந்த செலவில் பொருட்களை தயாரிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் அப்போது அவர் பேசினார்.
மேலும், அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்திய முக்கிய அம்சங்களாவன:
* உலக அளவில் நிலவும் பொருளாதார குழப்பங்களை, நம் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
* வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்
* உள்ளூர் சந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தொழில் துறை உற்பத்தி இருக்க வேண்டும்
* விவசாயத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்; நீர்ப்பாசன திட்டங்களை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப் படும்
* உணவு பதப்படுத்துதல் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும்
* சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு மோடி அந்தக் கூட்டத்தில் பேசினார்.