சர்ச் தாக்குதல்கள் பின்னணியில் மதப் பிரச்சினை கிடையாது.. உண்மை சொல்லுமா மீடியாக்கள்?- ஜேட்லி
டெல்லி: தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட பெரும்பாலான தாக்குதல்கள் மத ரீதியிலானவை கிடையாது..இப்போதாவது மீடியாக்கள் உண்மையை சொல்ல வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அருண் ஜேட்லி பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். அவர் கூறியதிலிருந்த முக்கிய அம்சங்கள் இவைதான்:
நில சட்டம்
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை சோனியா காந்தி படித்து பார்க்கவில்லை என்று நான் பயப்படுகிறேன். காங்கிரஸ் காலத்து நில சட்டம், கிராம மக்களை ஏழ்மை நிலையிலேயே வைத்திருக்க உதவும். ஆனால், பாஜகவோ, கிராமங்களை முன்னேற்றி, சம வாய்ப்பு அளிக்க முயல்கிறது.
வி.கே.சிங்கை குறிவைப்பது ஏன்
மத்திய அமைச்சர் வி.கே.சிங், பாகிஸ்தான் தூதரக நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக, ஒரு ஆங்கில டிவி சேனல் அவரை தேசதுரோகி என்று ஹேஷ்டேக் போட்டு திட்டியது. மீடியாக்கள் இதுபோல கூறியிருக்க கூடாது. நாட்டின் ராணுவ அதிகாரியாக இருந்தவரும், மத்திய அமைச்சருமாக இருப்பவுமான ஒருவரை இவ்வளவு தரக்குறைவாக அந்த மீடியா டார்கெட் செய்திருக்க கூடாது. அதேநேரம், விகேசிங்கும், மீடியாவை விபச்சாரம் செய்வதாக கூறியிருக்க கூடாது. தொடர்ந்து, குறிப்பிட்ட சேனலால், வி.கே.சிங் டார்கெட் செய்யப்படுவதால், கோபத்தில் அந்த வார்த்தையை அவர் உதிர்த்துவிட்டார்.
சிவசேனாவுக்கு கண்டிப்பு
முஸ்லிம்களுக்கு வாக்குரிமை தேவையில்லை என்று சிவசேனை நிர்வாகி கூறியிருக்க கூடாது. மதம், ஜாதி, மொழி போன்ற விவகாரங்களில் கருத்து சொல்லும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். மத்திய அரசின் கொள்கைகளை, இதுபோன்ற ஒரு சிலர் கூறும் கருத்துக்கள் மாற்றிவிடாது.
மதம் மாற்றலாம், தாய்மதம் திரும்ப கூடாதா?
கிறிஸ்தவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இந்தியாவில் நிலவுவதாக ஒரு மாய தோற்றத்தை சில மீடியாக்கள் திட்டமிட்டு உருவாக்கி வருகின்றன. அதே மீடியாக்கள், மதமாற்றத்தை ஆதரித்தும், மறு-மதமாற்றத்தை எதிர்க்கவும் செய்வதன் நோக்கம் தெரியவில்லை. மதமாற்றம் மற்றும் தாய் மதம் திரும்புதல் ஆகிய இரண்டையும், ஒரே தராசி்ல் வைத்து பார்ப்பதுதானே நடுநிலையாக இருக்க முடியும்.
சர்சுகளை தாக்குவது யார் தெரியுமா?
தேவாலய தாக்குதல் சம்பவங்களின் விசாரணை முடிவுகளில், அதில் மாற்று மதத்தினர் கலவர நோக்கத்தில் ஈடுபடவில்லை என்பது தெரியவருகிறது. பெரும்பாலான சம்பவங்களில், சர்ச் தாக்குதலில், இந்துக்கள் ஈடுபடவில்லை. இதையெல்லாம் தெரிந்துள்ள மீடியாக்கள், இனியாவது உண்மையை சொல்ல முன்வருமா? இவ்வாறு ஜெட்லி கூறியுள்ளார்.