வங்கிக்கடன்கள் தள்ளுபடி என மோடி அறிவித்தால் மட்டுமே தமிழகம் திரும்புவோம்.. அய்யாகண்ணு திட்டவட்டம்
விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பெற்றுள்ள கடன் தள்ளுபடி செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டால் மட்டுமே தமிழகம் திரும்புவோம் என்று அய்யாகண்ணு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லி: மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியுடன் டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் சந்தித்து பேசினர்.
வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் 15 நாட்களாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இவர்களை இரண்டாவது முறையாக சந்தித்த திமுக ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியுடன் சந்திக்க ஏற்பாடு செய்தார். அவர்களுடனான சந்திப்பிற்கு பின்னர் விவசாயி அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசியதாவது:
வங்கிக் கடன் தள்ளுபடி
நிதி அமைச்சர் அருண் ஜேட்லியிடம், பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினோம். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். இதனை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். ஆனால், எங்களது கோரிக்கை நிவர்த்தி செய்யப்படுமா என்று தெரியவில்லை.
விவசாயிகளுக்கு இரங்கல்
இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் உடன் இருந்தார். அவரும் ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து கேட்டறிந்தார். பின்னர், "நாங்கள் உங்களுக்கு உதவுகின்றோம்" என்று ஸ்மிருதி இராணி கூறினார். "இறந்துவிட்ட தமிழக விவசாயிகளுக்கு என்னுடைய இரங்கலை தெரிவியுங்கள்" என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
உட்கார வைத்து பேச்சுவார்த்தை
மத்திய அரசு எங்களை இதுவரை நிற்க வைத்து பேசியது. இப்போதுதான் முதன் முறையாக எங்களை உட்கார வைத்து பேசியது. அதிலிருந்து மத்திய அரசு ஏதோ ஏழெட்டு ஆயிரம் கோடி விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பார்கள் போன்று தெரிகிறது. இருந்தாலும் நாங்கள் கடன் தள்ளுபடி முழுமையாக வேண்டும் என்று கோரியுள்ளோம்.
திருப்தியான சந்திப்பு
தமிழகத்திற்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்ய முடியாது. செய்வதென்றால் இந்தியா முழுவதற்கும் செய்ய வேண்டுமே எப்படி செய்வது என்று அமைச்சர் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்றுதானே செய்துதானே ஆக வேண்டும் என்று நாங்கள் பதில் அளித்தோம். இந்த சந்திப்பு கடந்த கால சந்திப்பைவிட சற்று திருப்திகரமாகவே அமைந்துள்ளது.
திரும்ப மாட்டோம்..
இருந்தாலும், எங்களது போராட்டம் தொடரும்.. தொடரும்.. கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது என்று பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு வெளியாகும் வரை எங்களது போராட்டம் தொடரும். அதுவரை தமிழகத்திற்கு திரும்ப மாட்டோம் என்று அய்யாகண்ணு திட்டவட்டமாக தெரிவித்தார்.