பள்ளிக்கு மெகந்தி போட்டு வந்த மாணவி.. கையை கல்லில் தேய்த்த ஆசிரியர்கள்... பெற்றோர் கொதிப்பு
கான்பூர்: கைகளில் மெகந்தி அணிந்து வந்த மாணவிக்கு பள்ளி நிர்வாகம் தண்டனை அளித்த சம்பவம் கான்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூர் பதேபூர் ஜிடி ரோட்டில் உள்ளது செயின்ட் மேரி காண்வென்ட் பள்ளிக்கூடம். இங்கு பயிலும் மாணவி ஒருவர் கடந்த வாரம் ரக்ஷாபந்தனை ஒட்டி, கைகளில் ராக்கி கட்டி வந்தார். அதோடு அம்மாணவி கைகளில் மெகந்தியும் போட்டிருந்தார்.
இதைக் கண்டு பள்ளி நிர்வாகம் கண்டித்துள்ளது. மேலும், ராக்கி கயிறை துண்டித்த நிர்வாகிகள், கையில் இருந்த மெகந்தியை அழிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும், மெகந்தியை அழிப்பதற்காக மாணவியின் கையை கல்லில் வைத்து அவர்கள் தேய்த்துள்ளனர். இதனால், மாணவியின் கையில் ரத்தம் வழிந்தோடியது.
கைகளில் ரத்தக் காயத்தோடு மாலை வீட்டிற்கு வந்த மாணவியைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக அம்மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
மேலும், நடந்த சம்பவத்திற்கு விளக்கம் அளிக்கும் படி பள்ளி நிர்வாகத்தை அவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சமாதானம் செய்தனர்.
இந்தச் சம்பவம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.