வங்கி ஊழியர்களின் இன்றைய வேலை நிறுத்தம் ஒத்தி வைப்பு!
டெல்லி: பொதுத்துறை வங்கி ஊழியர்களின் இன்றைய ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் பொதுத்துறையைச் சேர்ந்த 27 வங்கிகள் உள்ளன. இவற்றில் உள்ள 50 ஆயிரத்துக்கும் அதிகமான கிளைகளில் பணிபுரியும் 8 லட்சம் ஊழியர்களுக்கான சம்பளம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் திருத்தி அமைக்கப்படவில்லை.
தங்களுக்கு 25% ஊதிய உயர்வு வழங்கவேண்டும் என்று வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். இதனை நிர்வாகத் தரப்பினரான இந்திய வங்கிகள் சங்கத்தினர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் கடந்த டிசம்பர் மாதம் 2-ந்தேதி முதல் 5-ந்தேதி முடிய வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் அறிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
இதைத் தொடர்ந்து இன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்த ஒரு நாள் வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் அமைப்பின் அமைப்பாளர் எம்.வி. முரளி தெரிவித்தார்.
இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறும்போது, ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும். பேச்சுவார்த்தையின்போது இந்திய வங்கிகள் சங்கத்தினர் அறிவித்த ஊதிய சதவீத உயர்வை நாங்கள் ஒப்புக் கொள்ளவில்லை. ஊதிய உயர்வு சதவீதத்தை இன்னும் அதிகரிக்கும் வரை பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.