பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் - யார் அவரது மனைவி?
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு சண்டீகரில் இன்று (ஜூலை 7) திருமணம் நடைபெறவுள்ளது. இது அவரது இரண்டாவது திருமணமாகும். டாக்டர் குர்பிரீத் கவுர் என்பவரை அவர் கரம் பிடிக்கப் போகிறார். டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் கட்சியின் சில முக்கிய தலைவர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் பகவந்த் மானின் திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் செய்தித் தொடர்பாளருமான மல்விந்தர் சிங் காங் இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முன்னாள் ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை கலைஞரான பகவந்த் மான், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றார். முந்தைய திருமணத்திலிருந்து அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் தங்களுடைய தாயுடன் அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
கடைசியாக கடந்த மார்ச் 16ஆம் தேதி பகவந்த் மான், பஞ்சாப் முதல்வராக பதவியேற்றபோது அவர்கள் அந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றதையடுத்து பகவந்த் மான் பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார்.
- பஞ்சாப் பாட்டியாலா வன்முறையால் பதற்றம் - ஆளும் கட்சியை இலக்கு வைக்கும் எதிர்கட்சிகள்
- சித்து மூஸ்வாலா: பாதுகாப்பை திரும்பப் பெற்ற மறுநாளே பஞ்சாப் பாடகர் சுட்டுக் கொலை
- கஞ்சா வளர்ப்பதையும், விற்பதையும் சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து: உல்லாசத்துக்கு நுகரத் தடை
முதல் மனைவி யார்?
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் பகவந்த் மானின் முன்னாள் மனைவியின் பெயர் இந்தர்பிரீத் கவுர். இந்த தம்பதிக்கு தில்ஷன் மான் என்ற மகனும் சீரத் கவுர் மான் என்ற மகளும் உள்ளனர். 2015இல் மான்-இந்தர்பிரீத் தம்பதி பிரிந்தனர். அதற்கான காரணத்தை இருவரும் வெளியிடவில்லை. அந்த காலகட்டத்தில் அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
பகவந்த் மானின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெற்ற பழைய இடுகையின்படி, தமது விவாகரத்து தனிப்பட்ட பிரச்னைகளால் தூண்டப்படவில்லை என்றும் சொந்த குடும்பத்தை விட பஞ்சாபை தமது குடும்பமாக தேர்வு செய்ததாகவும் பகவந்த் மான் கூறியிருந்தார்.
பேச்சாற்றலும் பெரிய கூட்டத்தை தமது நகைச்சுவை பேச்சுக்களால் கவர்ந்திழுக்கும் பாணியைக் கடைப்பிடித்த பகவந்த் மான், இந்திய மக்களவையில் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினராக இருந்தபோது தனது பேச்சுத்திறனால் அவையின் கவனத்தை கவர்ந்தார். ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் கால பிரசாரத்திலும் அவர் தீவிரமாக பங்கெடுத்தார்.2011இல் அரசியலில் நுழைந்தபோது, பஞ்சாப் மக்கள் கட்சியில் (PPP) இருந்தார் பகவந்த் மான். அவருக்கு ஆதரவாக இந்தர்பிரீத் அரசியல் பேரணிகள் மற்றும் பிரசாரங்களில் தீவிரமாக ஈடுபட்டார்.பக்வந்த் மானை ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக மக்களவைக்கு முதல் முறையாக அனுப்பி வைத்த சங்ரூர் கிராமங்களில் அவருக்காக இந்தர்பிரீத் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில், முதல் திருமணம் முறிந்த ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். அவரது தாயார் ஹர்பால் கவுரின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு பகவந்த் மான் திருமணம் செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த திருமணம், பகவந்த் மானின் வீட்டில் ஒரு சிறிய தனிப்பட்ட நிகழ்வாக நடைபெறும் என தெரிய வந்துள்ளது.
குர்பிரீத் கவுரின் தந்தை பெயர் இந்தர்ஜித் சிங். தாயார் ராஜ் கவுர். இவர்களின் சொந்த ஊர் குருக்ஷேத்ராவில் உள்ள பெஹோவா தாலுகாவில் உள்ள மதன்பூர் ஆகும்.
இந்த குடும்பத்தின் விவசாய நிலம் மதன்பூர் கிராமத்தில் உள்ளது. 2007க்கு முன், குர்பிரீத்தின் குடும்பம் மதன்பூர் கிராமத்தில் வசித்து வந்தது. பிறகு அவர்கள் பெஹோவாவுக்கு குடிபெயர்ந்தனர். குர்பிரீத் கவுரின் இரண்டு சகோதரிகள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
மதன்பூர் கிராமத்தில் வசிக்கும் பல்விந்தர் இது பற்றி பிபிசி பஞ்சாபி சேவையிடம் கூறுகையில், "டாக்டர் குர்ரீத்தின் தாத்தா பல தசாப்தங்களுக்கு முன்பு லூதியாணாவில் இருந்து பெஹோவாவுக்கு குடிபெயர்ந்தார். டாக்டர் குர்பிரீத் கவுருக்கு பகவந்த் மானை சில வருடங்களாகவே தெரியும்," என்றார்.
பல்விந்தர் சிங்கின் கூற்றுப்படி, குர்பிரீத் கவுர் ஹரியாணாவின் மௌலானாவில் உள்ள மகரிஷி மார்க்கண்டேஷ்வர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் எம்பிபிஎஸ் மருத்துவ பட்டம் முடித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்