ஜாட் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு மீதான இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
டெல்லி: ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் ஹரியானா அரசின் முடிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க பஞ்சாப்- ஹரியாணா மாநில உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஹரியாணா மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தங்களை சேர்த்து அரசு வேலை, கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க கோரி கடந்த பிப்ரவரி மாதம் ஜாட் இன மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. இந்த கலவரத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து ஜாட் உள்ளிட்ட 6 சமூகத்தினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை ஹரியாணா மாநில அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் பஞ்சாப்- ஹரியாணா மாநில உயர் நீதிமன்றம் இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.
இதனால் ஏமாற்றம் அடைந்த ஜாட் இன மக்கள் விரைவில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரி வந்தனர். ஆனால் நீதிமன்றம் விதித்த தடையை விலக்க அரசு எந்த முயற்சியும் எடுக்காததால் ஜாட் இன மக்கள் மீண்டும் தங்களது போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஹரியாணா அரசு சார்பில், ஜாட் மக்கள் நடத்தும் போராட்டத்தால் ஏற்படும் பின்விளைவுகளை கருத்தில் கொண்டு இட ஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீதிமன்றம் விலக்கிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் தவா சவுத்ரி, அருண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஒரே நாளில் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடாது. வரும் 10-ந் தேதிக்குள் இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் நீதிமன்றத்தில் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வரும் 13-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதனால் ஹரியானாவில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications