"நாங்க ஏன் பிரதர் எல்லாத்தையும் இழந்துட்டதா நினைக்கணும்.. புதுசா ஸ்டார்ட் பண்ணுவோம்".. பூரி மக்கள்
புவனேஸ்வர்: ஒடிசாவின் பூரி, நகரில் மக்கள் புதிதாக தங்கள் வாழ்க்கைய துவங்கும் மனநிலையுடன் இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வருகிறார்கள்.
ஒடிசாவில் பனி புயல் காரணமாக பூரி மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட கடற்கரை நகரங்கள் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் உள் கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக பூரி நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அங்கு அடிப்படை வசதிகளை உருவாக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. மக்கள் நம்பிக்கையுடன் இயல்பு நிலையை நோக்கி நகரத்தொடங்கி உள்ளனர்.
இயல்புநிலை நோக்கி
ஒரு பக்கம் ஃபனி புயல் காரணமாக பூரி நகர் கடற்கரையில் இருந்த ராட்சத விளக்கு சரிந்து விழுந்து கிடந்தது. அதன் பின்னால் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்க்கும் போது, 200 கிலோமீட்டர் வேகத்தில் உக்கிரமாய் பூரி நகரை ஃபனி புயல் சிதைத்துச் சென்ற நிலையில், மெதுவாக இயல்பு நிலையை நோக்கி பூரி நகரை நகர்த்திக் கொண்டிருப்பதை இச்சம்பவம் நமக்கு உணர்த்தியது. ஓட்டல்களில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கடற்கரையில் சிதறி கிடந்தன. இவற்றை பார்க்கும் போது குண்டு வெடிப்பில் சிதறிப் போனது போல் தோன்றியது.
ஆகாயத்தில் பறந்தபடி கையிலே மேப் வைத்து.. புயல் பாதித்த ஒடிசாவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி
தார் சாலைகள்
எப்போதும் பரபரப்பாக காணப்படும பூரின் கடற்கரை கருப்பு வண்ண தார் சாலை முழுவதும் மணலால் மூடி மண்மேடு போல் காணப்படுகிறது. ஆனால் மோசமாக சிதைத் இந்த இயற்கை பேரழிவால் மனிதனின் மனிதநேயத்திற்கு எந்த தடையும் போட முடியவில்லை. அங்கு உள்ள உள்ளூர் மக்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரரிகள், இணைந்து செயல்பட்டு பழைய நிலையை மீட்டுக்க ஏற்கனவே இறங்கி விடடார்கள்.
பூரி ஜெகன்நாதர் மண்.
இதுகுறித்து தனது கடைக்காக வைத்திருந்த ஸ்டாலை புயலில் பறிகொடுத்த பூரி நகரைச் சேர்ந்த தெருவோர வியாபாரி கூறுகையில், "புயல் கனவு போல் வந்து சென்றுவிட்டது. இந்த மாதிரி மோசமான சம்பவம் நடக்கும்ணு நாங்க நினைக்கவே இல்லை. ஆனால் ஒன்று, இந்த மண். எங்கள் தெய்வம் பூரி ஜெகன்நாதர் மண். அவருடைய ஆசிர்வாதம் இருக்குறதால எல்லாம் நல்லபடியாக மாறும். நாங்க ஏன் பிரதர் எல்லாத்தையும் இழந்துட்டதா நினைக்கணும்.. நாங்க புதுசா வாழ்க்கையை ஆரம்பிப்போம்" என்றார்.
இயல்பு நிலை திரும்ப
புயல் குறித்து கல்லூரி மாணவர் சன்ங்ராம் சிங் கூறுகையில், " நம்பிக்கை இருந்த போதிலும் பூரி நகர்ல உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் சரியாவதற்கு மாதக்கணக்கில் ஆகும். அதன் பிறகே சுற்றுலா பயணிகள் பூரிக்கு வருவார்கள். எனினும் நான் எனது சுற்றுலா டிரப்பை கேன்சல் செய்யவில்லை. பாலசோரில் இருந்து பூரிக்கு நான் வந்திருக்கிறேன்" என்றார்.