உத்தரகாண்ட் மாநில முதல்வராக பதவியேற்றார் புஷ்கர் சிங் தாமி
உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொண்டார்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொண்டார். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இதனால் அந்த மாநிலத்தில் புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்துவந்தது.
இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் உத்தரகாண்ட்டில் உள்ள டேராடூனில் திங்கட்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
'தோத்தாலும் ஜெயிச்சோமடா..' - உத்தரகாண்ட் முதல்வராக மீண்டும் புஷ்கர் சிங் தாமி தேர்வு
உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்பு
உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக்கொண்டார். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் புஷ்கர் சிங் தாமியுடன், அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். இன்று பதவியேற்கும் அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதியவர்கள் என்றும் மாநில பாஜக தலைவர் கூறியுள்ளார்.
மோடி, அமித் ஷா பங்கேற்பு
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அசாம், உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேச மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக மதன் கவுசிக் கூறியுள்ளார். பதவியேற்பு விழாவில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும்வகையில் ஏற்பாடுகளும், பல அடுக்கு பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.
புஷ்கர் சிங் தாமி
முதல்வராக கட்சித் தலைமையால் தேர்வு செய்யப்பட்ட பிறகு புஷ்கர் சிங் தாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், நாங்கள் வெளிப்படையான ஆட்சியை வழங்குவோம். நாங்கள் மக்களுக்காக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்றார்.
தொலை நோக்குப் பார்வை
பிரதமர் மோடி உத்தரகாண்ட் மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வைகொண்ட திட்டத்தை வழங்கியுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றவாறு செயல்பட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவோம். பொது சிவில் சட்டம் முக்கியமானது. அதையும் அமல்படுத்துவோம் என்று கூறியுள்ளார்.