தவறே செய்யாமல் இருக்க நான் மோடி அல்ல ; ஒரு சாதாரண மனிதன் : வித்தியாசமான ராகுலின் மன்னிப்பு
விலைவாசி குறித்த தவறான தகவல் அடங்கிய ட்விட் பதிந்ததற்காக ராகுல் காந்தி ட்விட்டரில் மன்னிப்பு கோரி உள்ளார்.
டெல்லி : குஜராத்தில் அதிகரித்து உள்ள விலைவாசி உயர்வைக் குறித்து தவறாக பதிந்த தகவலுக்காக, ட்விட்டரில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோரி உள்ளார்.
குஜராத்தில் வருகிற 9ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. பா.ஜ.க.,வின் கோட்டையான குஜராத்தில் இந்த முறையும் வெற்ற பெற பா.ஜ.க.,வும், ராகுலின் தலைமையில் புதிய உத்வேகம் எடுத்து இருக்கும் காங்கிரஸும் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் மோடியிடம் தினம் ஒரு கேள்வி கேட்கும் விதத்தில் கடந்த சில நாட்களாக ராகுல் புதிய பாணியில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி, மாநிலத்தில் அதிகரித்து இருக்கும் சட்ட ஒழுங்கு, வேலைவாய்ப்பின்மை, பெண்களின் மீதான வன்முறை, போதிய கல்வி வசதி இல்லாதது குறித்து தொடர் கேள்விகளை பிரச்சாரத்திலும், ட்விட்டர் பக்கத்திலும் எழுப்பி வருகிறார். இதற்கு குஜராத் மக்களிடையே பலத்த வரவேற்பு உள்ளது
இந்நிலையில், ஏழாவது நாளான நேற்று குஜராத்தில் அதிகரித்து இருக்கும் பால், வெங்காயம், பருப்பு, தக்காளி, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை குறித்த புள்ளிவிபரங்களோடு கேள்வி எழுப்பி இருந்த ராகுல், இந்த அரசு பணக்காரர்களுக்கு மட்டுமே செயல்பட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அதில் அவர் குறிப்பிட்டு இருந்த புள்ளிவிபரங்களில் சதவிகிதத்தில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கை தவறாக இருந்தது. இதை வைத்து பா.ஜ.க.,வினர் ராகுல் காந்தியை கிண்டல் அடித்து வந்தனர். உடனே அந்த பதிவு நீக்கப்பட்டு சரியான புள்ளி விபரங்கள் இணைக்கப்பட்டது. இருப்பினும் ராகுலை தொடர்ந்து கிண்டல் அடித்து வந்தனர்.
For all my BJP friends: unlike Narendrabhai, I am human. We do make the odd mistake and that’s what makes life interesting. Thanks for pointing it out and please do keep it coming, it really helps me improve. Love you all.
— Office of RG (@OfficeOfRG) December 6, 2017
இதற்கு மன்னிப்பும் அதே சமயம் எதிர் தரப்பினருக்கு பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி தனது ட்விட்டரில் புதிய ட்விட் ஒன்றை பதிவிட்டு உள்ளார். அதில், மனிதனாக பிறந்தால் தவறு செய்வது இயல்பு தான்; தவறே செய்யாமல் இருக்க நான் ஒன்றும் மோடி பாய் அல்ல. நான் மனிதன்; தவறு இருந்தால் இதே போல சுட்டிக்காட்டுங்கள். அது என்னை மேம்படுத்திக்கொள்ள உதவும். நன்றி ! என்று பதிவிட்டு உள்ளார்.