சீர்திருத்தங்களை தடுக்காதீர்கள்.. ராகுலை சந்தித்து வேண்டுகோள் விடுத்த தொழிலதிபர்கள்
டெல்லி: பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான சட்ட மசோதாக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்று தொழிலதிபர்கள் சிலர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
ஆட்சியில் உள்ளவர்கள், அமைச்சர்களை சந்தித்து தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை தொழிலதிபர்கள் முன்வைப்பது காலம்காலமாக நடைமுறையிலுள்ள வழக்கம். ஆனால், அரிதான நிகழ்வாக, தொழிலதிபர்கள் சிலர் எதிர்க்கட்சி வரிசையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தேசிய துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து இதுபோன்ற ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
டெல்லியிலுள்ள ராகுல் காந்தி இல்லத்தில் சுமார் 10 தொழிலதிபர்கள், அவருடன் சந்திப்பு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல்காந்தியும் இதை தனது டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷும் உடனிருந்தார்.
Had a fruitful discussion with top foreign institutional investors yesterday on state of the economy&its priorities pic.twitter.com/ZCVNaIcBgT
— Office of RG (@OfficeOfRG) November 20, 2015
இதுகுறித்து காங். நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜி.எஸ்.டி வரி சட்டத்தை கிடப்பில் போடும்வகையில் நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் செயல்பட கூடாது என்று, தொழிலதிபர்கள் கோரிக்கைவிடுத்தனர். இதற்கு, ஜி.எஸ்.டி சட்டத்தை காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் 3 வருடங்கள் முன்பே அறிமுகம் செய்தது. எனவே, அதை முடக்க காங்கிரஸ் நினைக்கவில்லை. ஆனால், ஏழைகள் நலன் பாதிக்காத அளவில் சட்டம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்". இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.