விரைவில் காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்? ஓரிருநாட்களில் அறிவிப்பு?
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஓரிருவாரங்களில் ராகுல் காந்தி பொறுப்பேற்கலாம் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. நாட்டின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை.
லோக்சபா தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலேயே கலகக் குரல் வெடித்தது. அத்துடன் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
லீவில் போன ராகுல்
இந்நிலையில் திடீரென அரசியலுக்கு 'லீவ்' எடுத்துக் கொண்டு வெளிநாட்டுக்கு சென்றார் ராகுல். காங்கிரஸ் தலைவர் பதவியை தமக்கே தர வேண்டும் என்று ராகுல் அடம் பிடித்ததாகவும் சோனியா காந்தி மறுத்ததாகவும் இந்த கோபத்தில்தான் அவர் வெளிநாடு சென்றார் எனவும் கூறப்பட்டது.
காரணம் இதுவா?
ஆனால் சோனியா காந்தி இதனை மறுத்து வந்தார். இதனிடையே 2 மாத லீவுக்குப் பின்னர் நாடு திரும்பினார் ராகுல் காந்தி. ராகுல் முன்னரை விட இப்போது மெச்சூரிட்டியாக இருப்பதாக கூறப்படுகிறது.
அதிரடி காட்டும் ராகுல்
நாடு திரும்பிய உடனே விவசாயிகளை சந்தித்து ஆலோசனை அவர் நடத்தினார். அதன் பின்னர் டெல்லி விவசாயிகள் பேரணியில் கலந்து கொண்டார். நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமையன்று நில ஆர்ஜித மசோதாவுக்கு எதிராக முழங்கினார்...
ஈர்ப்பு அதிகம்..
இன்று நெட் நியூட்டிராலிட்டி குறித்து பேசினார்... ராகுலின் பேச்சுகளில் முன்னைவிட ஈர்ப்பு அதிகமாக இருக்கிறது.. 2 மாத லீவில் நன்கு பயிற்சி எடுத்துக் கொண்டே ராகுல் நாடு திரும்பியிருப்பதாகவே தெரிகிறது.
தலைவர் பதவி?
இதனிடையே ஓரிரு வாரங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்கக் கூடும் என கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவில் அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் மூத்த தலைவர்களாக இருந்து வழிகாட்டுவார்கள் எனக் கூறப்பட்டதைப் போல சோனியா காந்தி 'மூத்த தலைவராக' 'வழிகாட்டியாக' ஒதுங்கிக் கொள்ள இருக்கிறராம்..
இதற்கான அறிவிப்பு இரண்டொரு நாட்களில் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.