3வது அணிக்கு ஆதரவு அளிக்காமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர ராகுல் திட்டம்!
டெல்லி: தேர்தலில் காங்கிரசால் தனிப்பெரும்பான்மை பெற முடியாவிட்டால், மூன்றாம் அணிக்கு ஆதரவு அளிப்பதைவிட, எதிர்க்கட்சி வரிசையில் உட்காரவே ராகுல்காந்தி விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மூழ்குவது உறுதி
நடைபெற்றுவரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தனிப்பெரும்பான்மை பெற முடியாது என்று கருத்துக் கணிப்புகள் உறுதிபட கூறிவருகின்றன. காங்கிரஸ் கட்சி தலைவர்களில் பலருக்கு 3 இலக்க சீட்டுகளைக்கூட வெல்லப் போவதில்லை என்ற அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

பாஜகவுக்கு டிமிக்கி
காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மூன்றாம் அணியிலுள்ள கம்யூனிஸ்ட், ஐக்கிய ஜனதாதளம், சமாஜ்வாதி போன்றவற்றுடன் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கலாம் என்பது சல்மான் குர்ஷித் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் பலரின் திட்டமாக உள்ளது. இதன்மூலம் பாஜகவை ஆட்சியமைக்கவிடாமல் தடுத்துவிடலாம் என்பது இவர்கள் நோக்கம்.

நிலையற்ற தன்மை
ஆனால் மூன்றாம் அணியுடன் இணைந்தோ, அல்லது மூன்றாம் அணிக்கு ஆதரவு அளித்தோ ஒரு மத்திய அரசை அமைத்தால் அது எப்போது வேண்டுமானாலும் கவிழும் என்று ராகுல்காந்தி நினைக்கிறாராம். இந்திய அரசியல் வரலாற்றில் அதுபோன்ற உதாரணங்கள் பல இருப்பதை ராகுல் கருத்தில் எடுத்துக்கொண்டுள்ளார்.

கட்சியை வளர்க்கலாம்
எப்போது கவிழுமோ என்ற திக்..திக்குடன் இருப்பதற்கு பதிலாக எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் அமருவது நல்லது. இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் கட்சியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வாய்ப்பு ஏற்படும் என்பது ராகுல் எண்ணம். குறிப்பாக பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை இழந்து மாநில கட்சிகள் வளர்ச்சி பெற்றுள்ளது குறித்து கவலையடைந்துள்ள ராகுல்காந்தி இந்த ஐந்தாண்டு காலத்தை கட்சியை வளர்ப்பதில் செலவிடுவது நீண்ட காலத்துக்கு நல்லது என யோசிக்கிறார்.

ஒத்துக்க மாட்டாங்களே..
தேர்தலுக்கு பிந்தைய காங்கிரிசின் நிலைப்பாடு பற்றி அகமதுபட்டேல், ஜெய்ராம்ரமேஷ், திக்விஜய்சிங் போன்ற கட்சி தலைவர்களிடம் கேட்டால், காங்கிரஸ் கூட்டணிதானே வெற்றி பெறப்போகிறது, பிறகு எதற்கு நாங்கள் மூன்றாவது அணி பற்றி யோசிக்க வேண்டும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications