ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டின் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா.. ஏன் தெரியுமா?
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த மோதல் இந்த நாடே அறியும். ராகுல் காந்தி குட் புக்கில் இடம் பிடித்தவரும், துணை முதல்வராக இருந்தவருமான சச்சின் பைலட் முதல்வர் பதவியை எதிர்பார்த்தபோது அவருக்கு கிடைக்கவில்லை.
முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருடன் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். கூவத்தூர் ரிசார்ட் போல் அங்கும் தனது தரவு எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து ஆட்சி கவிழ்ப்புக்கு முயற்சி செய்தார்.
சொந்த மண்ணில் விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயலகூடாது: விவசாயிகளுடன் துணை நிற்பேன்: ராகுல் காட்டம்
பனிப்போர்
ஆனால் பெரும்பான்மையை நிரூபித்ததால் அசோக் கெலாட் முதல்வர் பதிவியை தக்க வைத்துக் கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த காங்கிரஸ் தலைமை, சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்வர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பறித்தது. இதனை அறிந்து கொண்ட சோனியா அண்ட் ராகுல் அன் கோ சச்சின் பைலட்டிடம் சமாதானமாக பேசி அவரை தக்க வைத்தனர். பின்னர் இந்த நிகழ்வு நடந்த ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சச்சின் பைலட்டுக்கும், அசோக் கெலாட்டுக்கும் இடையே இன்னும் பனிப்போர் நீடித்து வருவதாக கூறப்படுகிறது.
கூண்டோடு ராஜினாமா
இந்த நிலையில் முதல்வர் அசோக் கெலாட் அரசு அமைச்சரவையை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. நாளையே புதிய அமைச்சர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் நாளையே கவர்னர் மாளிகையில் பதவியேற்க உள்ளனர். இதன் காரணமாக ராஜஸ்தான் மாநில அமைச்சர்கள் அனைவரும் ஒன்று ஒட்டுமொத்தமாக கூண்டோடு ராஜினாமா செய்தனர்.
சச்சின் பைலட் ஆதரவாளர்கள்
முன்னதாக அமைச்சரவை மறு சீரமைப்பு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்களை அசோக் கெலாட் சந்தித்துப் பேசினார். அமைச்சரவையில் தனது ஆதரவாளர்களையும் சேர்க்க வேண்டும் என்று சச்சின் பைலட் ஏற்கனவே சோனியா காந்தியிடம் கூறி இருந்தார், அதன்படி அவரது ஆதரவாளர்கள் அமைச்சரவையில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. சமீபத்தில் காங்கிரசில் இணைந்த முன்னாள் பி.எஸ்.பி எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
நெருக்கமான மூன்று அமைச்சர்கள்
ராஜஸ்தான் அமைச்சரவையில் தற்போது 21 அமைச்சர்கள் இருந்தனர். மேலும் 9 பேருக்கு இடமளித்து 30 அமைச்சர்கள் பதவியேற்கலாம் என்று கூறப்படுகிறது. முதலமைச்சருக்கு நெருக்கமான மூன்று அமைச்சர்கள் ஏற்கனவே தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். இதில் வருவாய்த்துறை அமைச்சரும், பார்மரின் எம்.எல்.ஏ.வுமான ஹரிஷ் சவுத்ரி, பஞ்சாப் மாநிலத்தின் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாபில் சமீபத்தில் உட்கட்சி பூசல் வெடித்தபோது காங்கிரஸை வழிநடத்தியதில் முக்கிய நபராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.