பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இளக்காரமா..? சல்மான்கான் மீது தேசிய மகளிர் ஆணையம் பாய்ச்சல்
டெல்லி: 'பலாத்காரம்' செய்யப்பட்ட பெண்ணை போல உணருகிறேன் என்று நடிகர் சல்மான் கான் கூறியது தவறானது என்று கூறியுள்ள தேசிய மகளிர் ஆணையம், இந்த பேச்சுக்காக 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் சல்மான்கானுக்கு கெடு விதித்துள்ளது.
ஹிந்தி சூப்பர் ஸ்டார் நடிகரான சல்மான்கான் தற்போது சுல்தான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம், குத்துச்சண்டை வீரரை மையமாக கொண்டு சுழலுகிறது.
படத்தின் நாயகனான சல்மான்கான் குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த சூட்டிங் தனக்கு மிகுந்த சிரமம் தருவதாக சல்மான்கான் பேட்டியொன்றில் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்கள்
சல்மான்கான் அளித்த இந்த பேட்டியில் கூறிய ஒரு வார்த்தைதான் சிக்கலுக்கு காரணமாக மாறிவிட்டது. சமூக வலைத்தளங்களில் அந்த வார்த்தைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.
குத்துச்சண்டை காட்சி
சல்மான்கான் அந்த பேட்டியில் கூறியதாவது: குத்துச்சண்டை வீரராக நடிப்பது மிகவும் சிரமமானது. 120 கிலோ எடையுள்ள மனிதரை தூக்க வேண்டும், 5 கோணங்களில் திரும்ப திரும்ப ்தை செய்ய வேண்டும். அதேபோலபல கோணங்களில் அவரை தூக்கி எறிய வேண்டும்.
பலாத்கார பெண்
தினமும் சூட்டிங் முடிந்துவிட்டு ஸ்பாட்டை விட்டு வெளியேறுகையில், 'பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணைப்போல' உணருகிறேன். ஏனெனில், உடம்பு சோர்வாக உள்ளது. காலை நேராக வைத்து நடக்க முடிவதில்லை. இவ்வாறு சல்மான்கான் கிண்டலாக கூறியுள்ளார்.
மன்னிப்பு
இந்த பேச்சு குறித்து 7 நாளுக்குள், மன்னிப்பு கேட்க சல்மான்கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளதாக ஆணைய தலைவர் லலிதா குமாரமங்கலம், தெரிவித்துள்ளார். மன்னிப்பு கேட்காவிட்டால் மகளிர் ஆணையத்தின் முன்னிலையில் சல்மான்கான் ஆஜராக வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆஜராக வேண்டும்
இதுகுறித்து லலிதா குமாரமங்கலம் கூறுகையில், சல்மான்கான் பேச்சு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சல்மான்கான் என்பதாலேயே அவர் இதுபோன்ற கருத்துக்களை கூறிவிட முடியாது. சல்மான்கான் மன்னிப்பு கேட்காவிட்டால், மகளிர் ஆணையம் முன்னிலையில் ஆஜராக வேண்டிவரும் என்றார்.