எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து விவாதிக்கத் தயார்: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு காங்கிரஸ் பகீரத பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறது. லோக்சபா எதிர்க்கட்சியாக 54 எம்.பி.க்கள் தேவை.
ஆனால் பாரதிய ஜனதாவுக்கு அடுத்தபடியாக, அதிக இடங்களைப் பிடித்த தனிப் பெருங்கட்சியாக இருப்பதால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தங்களுக்கே வழங்க வேண்டும் என்பது காங்கிரஸ் கோரிக்கை.
இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சுமித்ரா மகாஜன், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சி தம்மிடம் பேசினாலும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட கட்சியுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கூறினார்.
லோக்சபா கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதே தனது பிரதான குறிக்கோள் என்றும் பொருளாதாரம் மற்றும் இதர விவகாரங்களில் நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு அர்த்தமுள்ள விவாதம் மூலம் தீர்வு காணப்படும் என்றும் சுமித்ரா மகாஜன் கூறினார்.