ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் உடல்கள் சிக்கியிருக்கின்றன- மத்திய அமைச்சர் சதானந்த கவுடா
ஆனைக்கல்: ஓசூர் அருகே விபத்துக்குள்ளான பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் பெட்டிகளின் இடிபாடுகளில் உடல்கள் சிக்கியிருப்பதாக சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூர்- எர்ணாகுளம் இன்டர்சிட்டி ரயில் ஓசூர் அருகே இன்று காலை தடம் புரண்டது. இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 87 பேர் காயமடைந்தனர்.
இவ்விபத்து நிகழ்ந்த உடனேயே ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய அமைச்சரான கர்நாடாவைச் சேர்ந்த சதானந்தாவை தொடர்பு கொண்டு சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து மீட்புப் பணிகளை அமைச்சர் சதானந்த கவுடா பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விபத்தில் 8 அல்லது 9 பேர் உயிரிழந்திருக்கலாம்.
மோதிக் கொண்ட பெட்டிகளின் இடிபாடுகளில் உடல்கள் சிக்கியிருக்கின்றன. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது என்றார்.