பள்ளியில் சரஸ்வதி கோவிலை கட்டி பூஜை செய்ய குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்த ரிடையர்ட் முஸ்லீம் ஆசிரியர்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஓய்வு பெற்ற முஸ்லீம் ஆசிரியர் ஒருவர் சரவஸ்வதி கோவிலை கட்டியதுடன் பூஜை செய்யவும் பள்ளிக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
குஜராத் மாநிலம் கேதா மாவட்டத்தில் உள்ள நாதியாத் நகர் அருகே இருக்கும் மரிடா கிராமத்தைச் சேரந்தவர் அப்துல் வோரா. அதே கிராமத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மரிடா கிராமத்தில் வோராவின் குடும்பத்தையும் சேர்த்து மொத்தம் 3 முஸ்லீம் குடும்பங்கள் உள்ளன. இந்துக்கள் அதிகம் வசிக்கும் அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் சரஸ்வதி கோவிலை கட்டி முடித்துள்ளார் வோரா.
தனது சேமிப்பில் பெரும் பகுதியை கோவில் கட்ட செலவு செய்துள்ளார் வோரா. இது குறித்து அவர் கூறுகையில்,
நான் ஒரு ஆசிரியர். எனக்கு குழந்தைகள் தான் முன்னோடி. அவர்களுக்கு கல்விக் கடவுள் சரஸ்வதி தான் முன்னோடி. அதனால் தான் சரஸ்வதி கோவிலை கட்டினேன். கோவிலை கட்டி முடிக்க 5 ஆண்டுகள் ஆனது. கோவில் கட்ட கிராமத்தினரும் உதவி செய்தனர் என்றார்.
வோரா கோவிலை கட்டியதோடு நின்றுவிடாமல் எப்படி பூஜை செய்வது என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.