சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டை விட குறைந்த வருமானம்.. கவலையில் தேவஸ்தானம்!
பத்தினம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு வருமானம் வெகுவாக குறைந்துள்ளது.
கொரோனாவால் கடந்த 6மாதங்களுக்கு மேல் சிறிய கோயில்கள் முதல் பெரிய தேவஸ்தானம் கோயில்கள் வரை மூடப்பட்டிருந்தன. கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் மூலம் கோயில்கள் திறக்கப்பட்டன.
அதிலும் பக்தர்கள் அதிகம் குவியும் திருப்பதி, சபரிமலை உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் எண்ணிக்கையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஒரு நாளைக்கு 1000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதே சனிக்கிழமைகளில் 2000 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3000 பேருக்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு சீசன் குறித்த அறிவிப்புகளுக்கு பிறகு கடந்த 23 நாட்கள் ஐயப்பன் கோயிலுக்கு கிடைத்த வருமானத்தை திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
மம்தா ஆட்சிக்கு நாட்கள் நெருங்கிடுச்சி.. துர்காதேவிதான் என்னை காத்தார்.. ஜே பி நட்டா
அதாவது கடந்த நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 8-ஆம் தேதி வரை மொத்தம் ரூ 4.07 கோடியே வருமானமாக கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுடன் இதை ஒப்பிடும் போது 5 சதவீதம் கூட இல்லை. உண்டியலில் போடப்படும் காணிக்கை, அப்பம், அரவணபாயசம் ஆகியவற்றின் விற்பனையை பொருத்து வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட 23 நாட்களில் 34 ஆயிரம் பேர் ஐயனை தரிசித்துள்ளார்கள். கோவிட் சூழல் குறித்து ஆய்வுக்கு பின்னரே பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து யோசிப்போம். இதற்காக டிசம்பர் 15-ஆம் தேதி தேவஸ்தானம் ஆய்வு கூட்டத்தை நடத்தவுள்ளது. கடந்த 4 நாட்களில் 17 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.