வசதிபடைத்தவர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ளுங்கள்- இது சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்
அமராவதி: மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறி வரும் நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வசதிபடைத்த தம்பதிகள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆந்திராவின் விஜயவாடா நகரில் மாநில அரசு மற்றும் யுனிசெப் உதவியுடன் குழந்தைகள் சத்துணவு பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது:
ஆந்திராவில் மக்கள் தொகை வளர்ச்சி குறைந்து வருவது கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு காரணம் வசதிபடைத்தோர் தான். வசதிபடைத்த தம்பதிகள் ஒரு குழந்தை போதும் அல்லது குழந்தையே தேவையில்லை என்ற கொள்கையை பின்பற்றுகின்றனர். ஆனால் ஏழை மக்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்கின்றனர்.
மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டது. தற்போது அதை கைவிடுவது என முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் தொகையை அதிகரிக்க முடியும்.
தற்போது, ஜப்பான், சீனாவை போன்று இந்தியாவிலும் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் தான் இந்தியாவின் எதிர்கால சொத்துக்கள். இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் பணக்காரர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களால் சத்தான உணவை குழந்தைகளுக்கு வழங்க முடியும்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.