ஆம் ஆத்மியில் தொடரும் கோஷ்டி பூசல்! சிஸோடியா-யோகேந்திர யாதவ் பகிரங்க மோதல்!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிஸோடியா மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு இடையே கருத்து மோதல்கள் தொடர்வதால் அக்கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் டெல்லியில் ஏழு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டது. ஆனால், டெல்லி சட்டசபை தேர்தலின்போது அக்கட்சிக்கு மக்கள் மீதிருந்த ஆர்வம் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கவில்லை.
இதையடுத்து, ஆம் ஆத்மி கட்சியில் சுய பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கட்சியை அமைப்பு ரீதியாக மாற்ற வேண்டும்' என்று யோகேந்திர யாதவ் கூறினார். அவரது இந்த கருத்தை அக்கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான சிஸோடியா கடுமையாக எதிர்த்தார்.
அவர் யோகேந்திர யாதவுக்கு எழுதிய கடிதத்தில் "கேஜ்ரிவாலுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயங்களை பொதுப்படையாக பேசுவது தவறு என்று கூறியிருந்தார்.
இதையடுத்து, மணீஷ் சிஸோடியாவின் கடிதத்துக்கு யோகேந்திர யாதவ் நேற்று பதில் கடிதம் அனுப்பினார். அதில் லோக்சபா தேர்தலில் மக்கள் நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம். கட்சியின் அனைத்து மட்டத்தில் உள்ள தொண்டர்கள், நிர்வாகிகள் மிகவும் கவலையாக உள்ளனர்.
அவர்களை அழைத்துப் பேச வேண்டிய தலைமை, வேறு பாதையில் யாரையோ பழிவாங்கும் வகையில் செயல்படுவதில் ஆர்வம் காட்டுகிறது. எனவே, நான் கட்சியில் இருந்து விலகுவதே சரியாக இருக்கும்' என்று யோகேந்திர யாதவ் கூறியுள்ளார்.
இந்நிலையில், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கேஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மணீஷ் சிஸோடியா, குமார் விஷ்வாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால், கூட்டத்தை யோகேந்திர யாதவ் புறக்கணித்தார். அவருடன் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ள நவீன் ஜெய்ஹிந்தும் செயற்குழுவில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை கேஜ்ரிவாலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.