“ரோஹித் வெமுலா தலித் அல்ல”.. விசாரணை அறிக்கை தகவலால் பரபரப்பு... தாயார், நண்பர்கள் ஷாக்!
ஹைதராபாத்: தற்கொலை செய்து கொண்ட ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தலித் இல்லை என நீதிபதி ரூபன்வாலா விசாரணைக் குழு அறிக்கை சமர்ப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கைக்கு வெமுலாவின் தாயார் மற்றும் நண்பர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்ட ரோஹித் வெமுலா சக்ரவர்த்தி ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படித்து வந்தார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அம்பேத்கர் மாணவர் அமைப்பில் பணியாற்றி வந்தார். இந்த அமைப்பினருக்கும், பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) மாணவர் அமைப்பின ருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதில் ஏபிவிபி மாணவர் பிரிவைச் சேர்ந்த சுஷில் குமார் மீது இவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன.
அதனைத் தொடர்ந்து ரோஹித் உட்பட 5 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் விடுதியிலிருந்து வெளியேறும்படியும் வலியுறுத் தப்பட்டனர். இதனால் மன வருத்தம் அடைந்த ரோஹித் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
இதைத் தொடர்ந்து தலித் மாணவர் அமைப்பினர் உட்பட பல்வேறு சங்கத்தினர் போராட்டத் தில் குதித்தனர். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும் தற்கொலைக்கு தூண்டியதாகக் கூறி மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானி, பண்டாரு தத்தாத்ரேய்யா ஆகி யோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தினர்.
இதனிடையே தற்கொலை செய்து கொண்ட மாணவர் ரோஹித்துக்கு ஆதரவாக, 7 மாணவர்கள் 4 நாட்களாக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் போராட்டத்தால் ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. மாணவர்களின் தொடர் போராட்டத்தால் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்ததைத் தொடர்ந்து வெமுலாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ரூபன்வாலா தலைமையில் கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை நியமித்தது.
இந்நிலையில், இந்த கமிட்டி தற்போது தங்களது விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ரோஹித் வெமுலா தலித் அல்ல என்றும் அவரது தற்கொலைக்கு துணை வேந்தர் அப்பாராவ் காரணம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதனை ரோஹித் வெமுலாவின் தாய் ராதிகா குடும்பத்தினர் மற்றும் தலித் மாணவ சங்கங்கள் ஏற்க மறுத்து உள்ளன. அதை கண்டித்து தர்ணா போராட்டம் நடத்த மாணவ சங்கங்கள் முடிவு செய்துள்ளது.