ரெடிமேட் டாய்லெட்டை சீதனமாக கேட்டு வாங்கிய மணமகளுக்கு ரூ.10 லட்சம் பரிசு
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ரெடிமேட் கழிப்பறையை சீதனமாகக் கேட்டு வாங்கிய மணமகளுக்கு என்.ஜி.ஓ. ஒன்று ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள அந்துரா கிராமத்தைச் சேர்ந்தவர் சைத்தாலி கலாக்கே. விவசாயியின் மகளான அவருக்கும் யாவத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர மகோதேவுக்கும் கடந்த 15ம் திருமணம் நடைபெற்றது. அப்போது சைத்தாலி தனக்கு நகை, பணம் சீதனமாக வேண்டாம் மாப்பிள்ளை வீட்டில் கழிப்பறை இல்லாததால் ரெடிமேட் கழிப்பறையை சீதனமாக அளிக்குமாறு தனது தந்தையிடம் கேட்டார்.

இதையடுத்து சைத்தாலியின் தந்தை அவருக்கு ரெடிமேட் கழிப்பறையை சீதனமாக அளித்தார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரின் கவனத்தையும் அந்த ரெடிமேட் கழிப்பறை ஈர்த்தது.
இது குறித்து அறிந்த சுலப் இன்டர்நேஷனல் என்ற என்.ஜி.ஓ. சைத்தாலிக்கு ரூ.10 லட்சத்திற்கான விருது வழங்கி கௌரவிக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சைத்தாலியின் செயல் பிற பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளதாக அந்த என்.ஜி.ஓ. தெரிவித்துள்ளது.
இது பற்றி சுகாதார நிபுணரும், சுலப் இன்டர்நேஷனலின் ஆலோசகருமான பிந்தேஸ்வர் பதக் கூறுகையில்,
சைத்தாலி தனது செயல் மூலம் மக்களுக்கு சுத்தம் மற்றும் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியுள்ளார். அவர் பிறருக்கு முன்மாதிரியாக உள்ளார். சுத்தமான இந்தியா திட்டத்தை அறிவித்த பிரதமர் மோடியின் சாதனையாக இதை நான் கருதுகிறேன் என்றார்.












Click it and Unblock the Notifications