வாடகைப் பணத்தில் வாழும் பணக்கார பெண் சுயேட்சை வேட்பாளர்... சொத்து ரூ 2000 கோடி தான் !
கொல்கத்தா: இத்தேர்தலின் பணக்கார பெண் வேட்பாளரான அரச குடும்பத்தைச் சேர்ந்த கொல்கத்தா சுயேட்சை பெண் வேட்பாளர் தனது சொத்து மதிப்பு ரூ 2000 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அனைத்து சொத்துக்களும் வழக்குகளில் சிக்கியுள்ளதால் கையிருப்பு வெறும் ரூபாய் இருபதாயிரம் தான் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரத்தை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் கொல்கத்தாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வேட்பு மனுவில் சொத்து விவரமாக ரூ 2000 கோடியையும், ஆனால், கையிருப்பு ரூ 20000 மட்டுமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ராஜ குடும்பத்தைச் சேர்ந்த தான் வாடகைகள் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் வாழ்க்கை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஜ பரம்பரை...
கொல்கத்தாவில் கடந்த 1793 முதல் 1861 வரை வசித்து வந்தவர் ராணி ரஷ்மோனி. இவரது பேரன் வழிப்பேரனின் மனைவியான ஷாமாலி தாஸ் தான் அந்த பணக்கார வேட்பாளர்.
வழக்குகளில் சிக்கிய சொத்துக்கள்...
கணவர் மறைந்து விட்டதால் தற்போது தனது இரு மகன்களுடன் வசித்து வரும் ஷாமாலிக்கு அரச பரம்பரை சொத்துக்கள் ஏராளம் உள்ளது. ஆனால், அவை அனைத்தும் அரசு வழக்குகளில் சிக்கி உள்ளது. எனவே, வாடகையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார் ஷாமாலி.
இரு தொகுதிகளில் சுயேட்சையாக...
தற்போது 56 வயதாகும் ஷாமாலி லோக்சபா தேர்தலில் கொல்கத்தா தெற்கு மற்றும் ஜாதவ்பூர் ஆகிய 2 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
மலையளவு சொத்து.. மடுவளவு கையிருப்பு
இவர் தனது வேட்பு மனுவில் ரூ.2,000 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரொக்க கையிருப்பு ரூ.20 ஆயிரம் தான் என்று தெரிவித்துள்ளார். ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் மட்டுமே இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இந்துஸ்தான் நிர்மான் கட்சி...
சமூக சேவை அரசியலில் ஆர்வம் கொண்ட ஷாமாலி, முதலில் இந்துஸ்தான் நிர்மான் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கினார். ஆனால், இத்தேர்தலில் அவர் சுயேட்சையாகவே களமிறங்குகிறார்.
சர்க்கரை நோய்...
மேலும், சர்க்கரை நோயால் அவதிப்படும் ஷாமாலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டாலும், காலில் கட்டுடன் வாக்கு சேகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.