தூய்மை இந்தியா... கிராம பஞ்சாயத்திற்கு வருடத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு - நிதின் கட்காரி
டெல்லி: தூய்மை இந்தியா திட்டம் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் வருடத்திற்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 145வது பிறந்த தினமான இன்று அவரது கனவுத் திட்டமான தூய்மையான இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இதன் மூலம் வரும் 2019ம் ஆண்டிற்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இத்திட்டத்தை இன்று டெல்லி செங்கோட்டை அருகே பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்தியாவை சுத்தமாக வைக்கும் இத்திட்டத்தில் அனைத்து மாநில மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் வருடத்திற்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.