சீனாவின் ‘டியான்ஹே 2’ சூப்பர் கம்ப்யூட்டரை காலி செய்ய இந்தியாவுடன் கரம் கோர்க்கும் ரஷ்யா
பெங்களூர்: ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ்.சி. குழுமமும், ரஷ்ய அறிவியல் அகாடமியும் இணைந்து, இந்தியாவுடன் சேர்ந்து ஒரு அதி நவீன சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க களம் இறங்கியுள்ளன.
உலகிலேயே அதி வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் தற்போது சீனாவிடம்தான் உள்ளது. அதன் பெயர் டியான்ஹே 2 என்பதாகும். இதை முறியடிக்கவே தற்போது இந்தியாவுடன் கரம் கோர்த்துள்ளது ரஷ்யா.
சாப்ட்வேர் துறையில் வலுவான நாடு...
இது குறித்து ஆர்.எஸ்.சி குழுமத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான அலெக்ஸி ஷிமலேவ் கூறுகையில், ‘சூப்பர் கம்ப்யூட்டர்களை வடிவமைக்கும் அருமையான திறன் இந்தியாவிடம் உள்ளது. சாப்ட்வேர் துறையில் மிகவும் வலுவாக உள்ள நாடு இந்தியா.
அதி வேகமான சூப்பர் கம்யூட்டர்...
எனவே ரஷ்யாவின் தொழில்நுட்பத் திறன்களை இந்தியாவிடம் வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவுடன் இணைந்து உலகின் அதி வேகமான சூப்பர் கம்ப்யூட்டரை வடிவமைக்க ஆர்வமாக உள்ளோம்' எனத் தெரிவித்தார்.
குழு அமைத்து விவாதம்...
மேலும் கடந்த மாதம் ரஷ்ய அறிவியல் அகாடமியின் தலைவர் போரிஸ் ஷபனோவ், பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கும், கர்நாடக அரசுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் இதுதொடர்பாக விவாதிக்க ஒரு குழுவை ரஷ்யாவுக்கு அனுப்பு வைக்குமாறு கோரியிருந்தார்.
கொஞ்சம் கஷ்டம் தான்...
ஆனால் ரஷ்யாவுடன் இணைந்து சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்பது இப்போதைக்கு கடினம் என்று பிரதமரின் அறிவியல் ஆலோசகரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சீனா இத்துறையில் ரொம்ப தூரத்தில் உள்ளது. நாம் வெகு தொலைவில் பின் தங்கியுள்ளோம். எனவே இப்போது இது சா்தியம் என்று நான் கருதவில்லை' எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
டியான்ஹே 2...
சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான டியான்ஹே 2 சூப்பர் கம்ப்யூட்டர்தான் இந்த நிமிடத்தில் உலகிலேயே மிகவும் அதி வேகமான சூப்பர் கம்ப்யூட்டர் ஆகும். அமெரிக்காவின் சூப்பர் கம்ப்யூட்டரான டைட்டன் பிஎஸ்இ -2.70 %,ஐ இது தோற்கடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு டைட்டன்தான் முதலிடத்தில் இருந்தது.
83வது இடத்தில் பரம் யுவா 2....
இந்தியாவின் பரம் யுவா 2 சூப்பர் கம்ப்யூட்டர் உலக அளவில் 83வது இடத்தில் இருக்கிறது. ரஷ்யாவின் லோமோனசோவ் 37வது இடத்தில் இருக்கிறது.
சீனாவின் ஆதிக்கம்...
இந்நிலையில், இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து அதி நவீன, அதி வேக சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்க முடிந்தால், அது சீனாவின் ஆதிக்கத்தை தகர்க்கலாம் என நம்பப் படுகிறது.
ஏகாவை பின்னுக்குத் தள்ளிய சீனா...
2009ம் ஆண்டு இந்தியா ஏகா என்ற ஒரு அதி வேக சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. உலக அளவில் அது அப்போது 4வது அதி வேக சூப்பர் கம்யூட்டராக இருந்தது , ஆசியாவிலும் நம்பர் ஒன் சூப்பர் கம்ப்யூட்டராக அது கருதப்பட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே சீனா தலையெடுத்து அத்தனை பேரையும் பின்னுக்குத் தள்ளி விட்டது.