பைக் மீது காரை விட்டு இடித்து, போலீஸ்காரரை அடித்து.. டெல்லியில் ரஷ்ய தூதரக அதிகாரி அட்டகாசம்
டெல்லி: டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்துக்கு காரணமாக இருந்ததோடு போலீஸ்காரரையும் அடித்த ரஷ்ய தூதர அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் முதன்மை செயலாளர் டிமிட்ரி கிரியுகோவ், இவர் இன்று அதிகாலை தெற்கு டெல்லியின் மோதிபாக் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த பைக் மீது அவரது கார் மோதி போலீஸ் தடுப்பின் மீதும் மோதி நின்றது.
அங்கு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் நயீப் சிங் என்பவர், டிமிட்ரியிடம் விசாரித்து உள்ளார். முதலில் காரிலிருந்து கீழே இறங்க மறுத்த டிமிட்ரி, ஒருகட்டத்தில் எரிச்சலடைந்து நயீப் சிங்கின் முகத்தில் குத்தி உள்ளார்.
இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூதரக அதிகாரி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிகாரியின் கார் மோதியதில் பைக்கில் வந்த வாலிபர் படுகாயம் அடைந்து உள்ளார். அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிகபட்டு உள்ளார்.
தூதரக அதிகாரிகளுக்கான நடவடிக்கை விலக்குரிமை குறித்து, ஆலோசித்த பின் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.