''கடமையில் உயிரிழக்கும் ராணுவ வீரர்கள் தியாகிகளா'' பேஸ்புக்கில் கூறிய எழுத்தாளர்.. தூக்கிய போலீசார்
கவுகாத்தி: ''சம்பளம் வாங்கிக் கொண்டு கடமையை செய்யும் ராணுவ வீரர்களை ஏன் தியாகிகள்'' என கூறுகிறீர்கள் என்று அசாம் எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடந்து அசாம் எழுத்தாளர் சீகா சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

மாவோயிஸ்ட்டுகள் கொடூர தாக்குதல்
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களுக்கு இடையிலான வனப்பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சிறப்பு பாதுகாப்பு படையினர், மாவோயிஸ்ட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் பாதுகாப்பு படையினர் மீது கொடூர தாக்குதல் நடத்தினார்கள். நமது வீரர்களும் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

22 வீரர்கள் வீர மரணம்
ஆனாலும் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 22 பேர் வீர மரணம் அடைந்தனர். மேலும் 31 பேர் படுகாயம் அடைந்தனர். வீரர்களின் உயிரிழப்புக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ''நமது வீரர்களின் தியாகத்தை நாடு மறக்காது என்றும் மாவோயிஸ்ட்டுகளுக்கு பதிலடி கொடுப்போம்'' என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

அசாம் எழுத்தாளர் சர்ச்சை கருத்து
இந்த நிலையில் ''சம்பளம் வாங்கிக் கொண்டு கடமையை செய்யும் ராணுவ வீரர்களை ஏன் தியாகிகள்'' என கூறுகிறீர்கள் என்று அசாம் எழுத்தாளர் ஒருவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 48 வயதான அசாமி எழுத்தாளர் சீகா சர்மா தனது பேஸ்புக் பதிவில், '' சம்பளம் பெற்றுக் கொண்டு கடமையை செய்யும் ராணுவ வீரர்களை தியாகிகள் என கூறுவதை நிறுத்துங்கள். மின்சாரம் காரணமாக உயிரிழக்கும் மின்சாரத் துறை ஊழியர்களை கூட தியாகிகள் என்று கூறலாம்.

பல்வேறு தரப்பினர் கண்டனம்
கடமையை செய்து உயிரிழப்பவர்களை தியாகிகள் என அழைத்து மக்களை உணர்ச்சிவசப்படுத்துவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும்'' என்று சீகா சர்மா கூறி இருந்தார். இவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக கவுகாத்தி உயர்நீதிமன்றத்தின் இரண்டு வக்கீல்கள் சீகா சர்மா வுக்கு எதிராக டிஸ்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

எழுத்தாளரை கைது செய்தனர்
மேலும், தேசத்தின் புனிதமான ராணுவ வீரர்களை அவமதித்த எழுத்தாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்திலும் முறையிட்டனர். இந்த நிலையில் சர்ச்சை கருத்து தெரிவித்த எழுத்தாளர் சீகா சர்மாவை போலீசார் கைது செய்தனர். அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கவுகாத்தி போலீஸ் கமிஷனர் முன்னா பிரசாத் குப்தா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications