2002ல் காரை ஏற்றி கொன்றபோது சல்மான் கானிடம் டிரைவிங் லைசென்ஸே இல்லை
மும்பை: சல்மான் கான் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியபோது அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்று ஆர்டிஓ அலுவலக அதிகாரி மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி இரவு காரை தாறுமாறாக ஓட்டி மும்பை பந்த்ரா பகுதியில் சாலையோரம் படுத்திருந்தவர்கள் மீது வாகனத்தை ஏற்றினார். இதில் சாலையோரம் தூங்கிய ஒருவர் பலியானார், 4 பேர் காயம் அடைந்தனர்.
இது குறித்த வழக்கு மும்பையில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் ஒன்றில் நடந்து வருகிறது. விபத்தை ஏற்படுத்தியபோது சல்மான் குடிபோதையில் இல்லை என்று அவரை பரிசோதனை செய்த மருத்துவர் சான்று அளித்துள்ளார்.
இந்நிலையில் திங்கட்கிழமை இந்த வழக்கு செஷன்ஸ் நீதிபதி டி.டபுள்யூ. தேஷ்பாண்டே முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பணிபுரியும் துணை இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். சல்மான் 2004ம் ஆண்டு தான் ஓட்டுனர் உரிமம் பெற்றார். விபத்தை ஏற்படுத்தியபோது அவரிடம் உரிமம் இல்லை என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்துள்ளனர். இன்னும் சிலர் தான் சாட்சியம் அளிக்க வேண்டி உள்ளது.