பரப்பன அக்ரஹார சிறையையே போயஸ் தோட்டமாக மாற்றிய சசிகலா
பரப்பன அக்ரஹார சிறையில் ராஜவாழ்க்கைை வாழ்ந்து வருகிறார் சசிகலா என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூர்: பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் தனது பணப் பலத்தை வைத்து ஒரு மினி ராஜ்ஜியத்தையே சசிகலா நடத்தி வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 1991-96 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சொத்துக்களை குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன்படி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்.
சிறை சென்றதும் பேன் வசதி
சிறைக்கு சென்றதும் அவர் ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் அவருக்கு நாற்காலி, பேன் ஆகிய வசதிகள் செய்து தரப்பட்டன. நாளடைவில் மேலும் சில வசதிகளும் கிடைத்துள்ளது.
பணப்பலத்தை வைத்து...
சசிகலா தன்னிடம் உள்ள பணத்தை வைத்து சிறையில் வாழ்ந்தாலும் ஒரு ராஜபோக வாழ்க்கையையே வாழ்ந்து வருகிறார். இவருக்கு அளிக்கப்படும் விஐபி உபசரிப்பு குறித்து கர்நாடகா மாநில டிஐஜி ரூபா, மாநில டிஜிபி தத்தாவுக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
தனி சமையறை
சிறையில் சசிகலாவுக்கென்று தனி சமையறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இதுபோன்ற சிறப்பு வசதிகளுக்காக சிறை துறை அதிகாரிகளுக்காக அவர் ரூ. 2 கோடி வரை பணம் கொடுத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் சிறையில் உள்ள கைதிகளை இத்தனை முறை, இத்தனை மணிக்குள்தான் பார்க்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
விதிகளையும் வளைத்தார்
விதிகளெல்லாம் மற்ற கைதிகளுக்குதான், தனக்கில்லை என்பது போல் அவரை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்துவிட்டு சென்றுள்ளனர். அவர்களுள் பெரும்பாலானோர் பார்வையாளர் நேரத்தை கடந்து 5 மணிக்கு மேல் பார்த்துள்ளனர். இது அப்பட்டமான விதிமுறை மீறல்.
போயஸ் தோட்டம்
ஜெயிலில் தண்டனை பெற்றாலும் அவர் போயஸ் தோட்ட இல்லத்தில் வசிப்பது போன்றே வசித்து வருகிறார். இதற்காக அவர் தரப்பில் பணம் தண்ணீராக செலவு செய்யப்படுகிறது.