ராஜினாமா செய்யச் சொல்லி ஜெ. மிரட்டுகிறார்... ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா கதறலால் பரபரப்பு
டெல்லி: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தம்மை அறைந்ததாகவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மிரட்டியதாகவும் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ராஜ்யசபாவில் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள திமுக மற்றும் அதிமுக எம்பிக்கள் வார விடுமுறைக்காக சொந்த ஊர் வந்துவிட்டு, மீண்டும் டெல்லி செல்வது வழக்கம்.
சனிக்கிழமையன்று திமுக எம்பி திருச்சி சிவாவும், அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவும் சொந்த ஊர் திரும்புவதற்காக டெல்லி விமான நிலையம் வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாய்தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் ஆவேசமடைந்த சசிகால புஷ்பா, திருச்சி சிவாவின் கன்னத்தில் 4 முறை அறைந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்த சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவை அழைத்து நேற்று ஜெயலலிதா விளக்கம் கேட்டார். சசிகலா புஷ்பாவும் விளக்கம் அளித்து விட்டு மீண்டும் டெல்லி சென்று விட்டார்.
இதனிடையே இன்று ராஜ்யசபா கூடியது காலை 11 மணியளவில் சசிகலா புஷ்பா பேசினார். அப்போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக சசிகலா புஷ்பா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா, தன்னை ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டினார். ராஜினாமா செய்யாமல் நாட்டுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறிய சசிகலா, தமக்கு எம்.பி பதவி அளித்த கட்சித்தலைமைக்கு நன்றி கூறினார்.
தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாகவும் பாதுகாப்பு இல்லாததால் தமக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் கதறினார். ராஜ்யசபாவில் ஜெயலலிதாவை பேசிய சசிகலா புஷ்பாவிற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Sasikala Pushpa breaks down in Rajya Sabha, says "there is a threat to my life" pic.twitter.com/pG0w2stY9X
— ANI (@ANI_news) August 1, 2016
ராஜ்யசபா தலைவர் இருக்கையை நோக்கி சென்று அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன், சசிகலாவுக்கு எதிராக குரல் கொடுத்தார். அப்போது ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் தலையிட்டு தனிப்பட்ட யார் மீதும் எந்த புகாரையும் தெரிவிக்கக் கூடாது என கண்டித்தார்.
சசிகலா புஷ்பா ராஜ்யசபாவில் பிரச்சனையை எழுப்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில் அதிமுகவில் இருந்து அவரை டிஸ்மிஸ் செய்து ஜெயலலிதா உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.