2ஜி வழக்கில் தலையிடக் கூடாது, விலகுங்கள்... சிபிஐ இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தலையிடக் கூடாது. அந்த வழக்கிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்ஹாவுக்குப் பதில் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரி இந்த வழக்கை கண்காணித்து வர வேண்டும் என்றும் அது உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ இயக்குநரான இருந்த ரன்ஜித் சின்ஹா, 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலரை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசியதாக, உச்சநீதிமன்றத்தில் சென்டர் பார் பப்ளிக் இன்டரஸ்ட் லித்திகேஷன் என்ற அமைப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு, வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆஜராகிய அரசு சிறப்பு வக்கீல் ஆனந்த் குரோவர், 2ஜி வழக்கு விசாரணையில் சிபிஐ இயக்குநரின் தலையீடு இருந்தது நிருபணம் ஆகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக சில நடவடிக்கைகள் எடுக்க அவர் முயற்சித்தார். 2ஜி வழக்கில் சிபிஐக்கும், அதன் இயக்குநருக்கும் இடையே மாறுபட்ட கருத்துக்கள் இருந்தது என்று தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கிலிருந்து சின்ஹா தானே விலகிக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், நடப்பது எல்லாம் நல்லதாக தெரியவில்லை. சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பூர்வாங்கம் இருப்பதாக நம்ப வேண்டியுள்ளது. நம்பக் கூடியதாக அவை உள்ளன.
வழக்கு தொடர்பான தகவல்களை மனுதாரருக்கு கசிய விட்டதாக டிஐஜி சந்தோஷ் ரஸ்தோகி மீது சின்ஹா குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. தனது புகாருக்கு ஆதாரமாக எதையும் சின்ஹா இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று நீதிபதிகள் கூறினர்.
மேலும் ரஸ்தோகியை 2ஜி வழக்கு விசாரணையைலிருந்து மாற்றியது உச்சநீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கிடையே, வழக்கு விசாரணையின்போது கோர்ட் ஹாலில், தேவையில்லாமல் பல சிபிஐ அதிகாரிகள் கூடியிருப்பதற்கும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அனைவரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து அங்கிருந்த 8 சிபிஐ அதிகாரிகளும் வெளியேறிச் சென்றனர்.