காமக்கொடூரன் சுரிந்தர் கோலி தூக்கிற்கு அக்டோபர் 29வரை இடைக்கால தடை! உச்சநீதிமன்றம் உத்தரவு!!
டெல்லி: சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று குவித்த குற்றவாளி சுரிந்தர் கோலிக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு ஒரு வார காலம் இடைக்கால தடை விதித்திருந்த உச்சநீதிமன்றம், அதை அக்டோபர் 29ம் தேதிவரை இன்று நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டா அடுத்த, நிதாரி பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு சிறுமி ஒருவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, சுரிந்தர் கோலி என்பவர் சிறுமியைக் கொன்றதும், இதேபோல் 2005 முதல் 2006க்கு இடைப்பட்ட காலத்தில் மேலும் பல சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
கொலை செய்த சிறுமிகளை தனக்கு வேலை அளித்திருந்த தொழிலதிபர் மோனிந்தர் சிங் என்பவரின் பண்ணை வீட்டுக்கு அருகே புதைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. மோனிந்தர் சிங் மற்றும் அவரின் வேலைக்காரரான சுரிந்தர் சிங் கோலி ஆகிய இருவரும், 16க்கும் மேற்பட்ட சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, உடலை அழித்ததாக கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, கோலி மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், 5 வழக்குகளில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கீழ் நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தசூழலில், கடந்த ஜூலை மாதம் சுரிந்தர் கோலியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.
இந்நிலையில், மரணத்தை எதிர்நோக்கியுள்ள 42 வயதேயான சுரிந்தர் கோலி, காசியாபாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு 12ம் தேதி (இன்று) மீரட் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைக் கண்காணிப்பாளர் ரிஸ்வி தெரிவித்திருந்தார். காஜியாபாத் செஷன்ஸ் கோர்ட் இதற்கான 'வாரன்ட்' பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து வீட்டுக்கே சென்று சுரிந்தர் கோலியின் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், சுரிந்தர் கோலிக்கு நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், தண்டனையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஏழு நாட்கள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவு சிறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று மீண்டும் வந்தது. அப்போது சுரிந்தர் கோலிக்கு விதிக்க இருந்த தூக்கு தண்டனையை அக்டோபர் 29ம்தேதிவரை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபர் 28ல் நடக்கும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.