லோக்சபா எதிர்க்கட்சி தலைவரை நாங்களே நியமிக்கட்டுமா? மத்திய அரசு மீது சுப்ரீம்கோர்ட் காட்டம்
லோக்பால் விவகாரத்தில் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
டெல்லி: லோக்பால் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் நீடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு லோக்பால் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்தது.
அதே நேரத்தில் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் எந்த கட்சியும் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற முடியாமல் போனது. இதனால் மத்தியில் லோக் ஆயுக்தா தலைவரை நியமிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதற்காக லோக்பால் சட்டத்தில் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் இல்லை என்ற ஒரு காரணத்தையே மத்திய அரசு கூறி வருகிறது; மத்திய அரசு விரும்பினால் எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்கலாமா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மேலும் லோக்சபால் சட்டத்தை நிறைவேற்றாவிட்டால் அதை நாங்களே நிறைவேற்றுவோம் எனவும் டிசம்பர் 8-ந் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.